பதற்றத்தை குறைக்கும் ஜப்பானிய ‘ஷின்ரின்-யோகு’ ரகசியம்

Japanese Shinrin-Yoku Secret : ஷின்ரின்-யோகு என்பது இயற்கையுடன் இணைந்து மன அழுத்தத்தை குறைக்கும் ஜப்பானிய நடைமுறை ஆகும். மரங்கள் வெளியிடும் பைட்டான்சைடுகள் ரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகின்றன. இயற்கை சூழலில் அமைதியாக அமர்ந்து அல்லது மெதுவாக நடப்பது மனநலத்தையும் தூக்கத்தையும் மேம்படுத்துகிறது.

பதற்றத்தை குறைக்கும் ஜப்பானிய ‘ஷின்ரின்-யோகு’ ரகசியம்

ஷின்ரின்-யோகு ரகசியம்

Published: 

09 Apr 2026 12:25 PM

 IST

ஷின்ரின்-யோகு பயிற்சியை மேற்கொள்ளும்போது, மரங்கள் வெளிப்படுத்தும் ‘பைட்டான்சைடுகள்’ என்ற இயற்கையான நறுமணத்தை நாம் சுவாசிக்கிறோம். இது நம் ரத்த அழுத்தத்தை குறைத்து, நரம்பு மண்டலத்தை சீரமைக்கிறது. அலுவலக வேலை, வீட்டுப் பொறுப்புகள் என நம் பொழுதுகள் எப்போதும் எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒரு நிமிடம் அமைதியாக உட்காரக் கூட நேரமில்லாமல் ஓடும்போது, நம் மனம் அறியாமலேயே ஒருவித பதற்றத்தில் இருப்பதை பலரும் உணர தவர்கின்றனர். திடீரென கோபம் வருவது, சரியாக தூக்கம் வராதது, எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் போவது என இவை அனைத்தும் நம் நரம்பு மண்டலம் ஓய்வின்றி உழைப்பதன் அறிகுறியே.

புதிய தீர்வாக வந்த ஜப்பானிய நடைமுறை

மூச்சுப் பயிற்சி செய்யுங்கள், காஃபின் அளவை குறைத்து கொள்ளுங்கள் போன்ற வழக்கமான ஆலோசனைகள் ஒரு கட்டத்தில் நமக்கே சலிப்பை தந்துவிடும். இப்படிப்பட்ட சூழலில் தான், ஊட்டச்சத்து நிபுணர் தீப்சிகா ஜெயின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தீர்வை பகிர்ந்துள்ளார். அதுதான் ஜப்பானியர்களின் ரகசியமான ‘ஷின்ரின்-யோகு’ (Shinrin-yoku). இது ஏதோ ஒரு கடினமான உடற்பயிற்சி அல்ல, மாறாக நம்மைச் சுற்றியுள்ள இயற்கையோடு நாம் மீண்டும் இணைவது பற்றியது. இந்த எளிய பழக்கம் எப்படி நம் உடலையும் மனதையும் உள்ளிருந்து குணப்படுத்துகிறது என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

இயற்கையுடன் இணைதல் எனும் கலை

இயற்கையுடன் இணைதல் எனும் கலை: ஷின்ரின்-யோகு என்பதை எளிமையாக சொன்னால் ‘வனக் குளியல்’ எனலாம். இதற்காக நீங்கள் காடுகளுக்கு சென்று மரம் ஏறவோ அல்லது நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்யவோ வேண்டியதில்லை. இயற்கையான ஒரு சூழலில், மரங்களுக்கு நடுவே சும்மா அமர்ந்திருப்பது அல்லது மெதுவாக நடப்பது தான் இதன் அடிப்படை.

வரலாற்று பின்னணி மற்றும் முக்கியத்துவம்

நம் ஐம்புலன்களையும் அந்த சூழலுக்குள் கொண்டு வருவதே இதன் நோக்கம். ஜப்பானில் 1980-களில் நவீன தொழில்நுட்ப உலகினால் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று இது ஒரு மருத்துவ முறையாகவே உலகெங்கும் பார்க்கப்படுகிறது.

நரம்பு மண்டலத்தின் மீதான தாக்கம்

நரம்பு மண்டலத்தின் மீதான தாக்கம்: நமது நரம்பு மண்டலம் உடலின் கட்டளை மையமாகும். இதுதான் நம் இதயம் துடிப்பது முதல் செரிமானம் வரை அனைத்தையும் கவனிக்கிறது. நாம் பதற்றமாக இருக்கும்போது, நம் நரம்பு மண்டலம் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கும்.

பைட்டான்சைடுகள் தரும் நன்மைகள்

ஷின்ரின்-யோகு பயிற்சியை மேற்கொள்ளும்போது, மரங்கள் வெளிப்படுத்தும் ‘பைட்டான்சைடுகள்’ என்ற இயற்கையான நறுமணத்தை நாம் சுவாசிக்கிறோம். இது நம் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தை சீரமைக்கிறது. இதனால் மனம் உடனடியாக ஒரு நிதானத்திற்கு வருகிறது.

ஐம்புலன்களின் பங்களிப்பு

ஐம்புலன்களின் பங்களிப்பு: இந்த முறையில் காடுகளின் காட்சிகளை மட்டும் பார்ப்பது கிடையாது. பச்சை நிற தழைகள் மற்றும் இலைகளின் வழியே வரும் சூரிய வெளிச்சத்தை பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சியை தரும். பறவைகளின் சத்தம் மற்றும் காற்றின் ஓசையை கேட்பது மனதிற்குள் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை அமைதிப்படுத்தும்.

மூளை புத்துணர்ச்சி பெறும் விதம்

மண்ணின் வாசனையையும், இலைகளின் வாசனையையும் நுகர்வது மூளைக்கு ஒரு புத்துணர்வைத் தரும். இப்படி ஐம்புலன்களையும் இயற்கையில் செலுத்தும் போது, நம் உடல் தன்னைத் தானே சரிசெய்யும் பணியை தொடங்குகிறது.

தூக்கம் மற்றும் செரிமான மேம்பாடு

தூக்கமும் செரிமானமும்: நிபுணர் தீப்சிகா ஜெயின் குறிப்பிடுவது போல, இந்த முறை வெறும் மன அமைதியோடு நின்றுவிடுவதில்லை. இயற்கையோடு நேரம் செலவிடுவது நமது உடலின் உயிரியல் கடிகாரத்தை சீரமைக்கிறது. இதன் விளைவாக இரவு நேரங்களில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது.

உடல் ஆரோக்கியத்தில் மாற்றம்

அதுமட்டுமல்லாமல், மூளைக்கும் குடலுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பின் காரணமாக, மன அழுத்தம் குறையும் போது செரிமானக் கோளாறுகளும் நீங்குகின்றன. செரிமானம் சிறப்பாக நடக்கும்போது உடலின் ஆற்றல் அதிகரித்து, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.

வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை

வாழ்க்கை முறையில் சிறிய மாற்றம்: இன்றைய நெருக்கடியான சூழலில் வாழ்வோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். ஒரு பூங்காவிலோ அல்லது மரம் செடிகள் நிறைந்த இடத்திலோ வாரத்திற்கு ஒரு முறையாவது செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

மன அமைதியை மீட்டெடுக்கும் வழி

செல்போனைத் தள்ளி வைத்துவிட்டு, இயற்கையின் அழகை மட்டும் கவனிக்கும்போது, உள்ளுக்குள் இருக்கும் பதற்றம் மறைந்து ஒரு புதிய தெளிவு பிறக்கும். இந்த எளிய ஜப்பானிய ரகசியம் நம்மை நவீன உலகின் அழுத்தங்களிலிருந்து விடுவித்து, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலிமையாக்குகிறது.

எப்படி மேற்கொள்ள வேண்டும்?

எப்படி செய்வது? மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு பூங்கா, அடர்ந்த மரங்கள் கொண்ட ஒரு பகுதி, அல்லது ஒரு சிறிய காடு போன்ற அமைதியான இடத்தை தேர்வு செய்யவும். மரங்கள் மற்றும் செடிகள் அதிகமாக இருக்கும் இடம் அவசியம். ஏனென்றால், மரங்கள் வெளியிடும் ஃபைட்டோசைட்ஸ் தான் ஆரோக்கிய நன்மைகளுக்கு முக்கிய காரணம். செல்போன், கேமரா மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை அணைத்துவிட்டு, பையில் வைத்து விடுங்கள்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?