மக்களவையில் இன்று மெகா வாக்கெடுப்பு.. நிறைவேறப் போகும் 3 முக்கிய சட்டங்கள்..
பொதுவாக மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமே தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால், முடிவுகளில் சந்தேகம் அல்லது எதிர்ப்பு கிளம்பும்போது 'டிவிஷன்' எனப்படும் முறை பின்பற்றப்படும். இதில் தானியங்கி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் 'ஆதரவு', 'எதிர்ப்பு' அல்லது 'வாக்களிக்கவில்லை' எனத் தனித்தனியாகப் பதிவு செய்யப்படும்.

தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் இன்று (ஏப்ரல் 17, 2026) ஒரு மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. 2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலும், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ள அந்த மூன்று மசோதாக்கள், 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026: இது பெண்கள் இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்த வழிவகை செய்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா, 2026 (Delimitation Bill) மக்களவை இடங்களை 543-லிருந்து 850-ஆக உயர்த்த முன்மொழிகிறது. யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைகளிலும் இந்த மாற்றங்களைக் கொண்டு வர வழி செய்கிறது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் ‘தொகுதி மறுவரையறை’ மசோதா தாக்கல்.. தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு!!
இன்றைய வாக்கெடுப்பின் முக்கியத்துவம்:
நேற்று (ஏப்ரல் 16) இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அறிமுகம் செய்வதற்கே ‘வாக்கெடுப்பு’ நடத்தப்பட்டது. அதில் அரசுக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 185 வாக்குகளும் கிடைத்தன. இன்று இந்த மசோதாக்கள் மீது முழுமையான விவாதம் நடைபெற்று, இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமின்றி, உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க வாக்குச் சீட்டுகள் மூலமாகவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த எண்ணிக்கையில் சிறு மாற்றங்கள் இருக்கலாம் என சபாநாயகர் தெரிவித்தார்.
வாக்கெடுப்பு முறை:
பொதுவாக மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமே தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால், முடிவுகளில் சந்தேகம் அல்லது எதிர்ப்பு கிளம்பும்போது ‘டிவிஷன்’ எனப்படும் முறை பின்பற்றப்படும். இதில் தானியங்கி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் ‘ஆதரவு’, ‘எதிர்ப்பு’ அல்லது ‘வாக்களிக்கவில்லை’ எனத் தனித்தனியாகப் பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால் உறுப்பினர்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தியும் தங்கள் வாக்கை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
மசோதாவின் அதிரடி மாற்றங்கள்:
இந்த புதிய மசோதாவின்படி, மக்களவையின் மொத்த இடங்கள் 850-ஆக அதிகரிக்கப்படும். இதில் மாநிலங்களுக்கு 815 இடங்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் ஒதுக்கப்படும். மொத்தமுள்ள 850 இடங்களில் 33% அடிப்படையில் சுமார் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனதால், 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தொகுதி மறுவரையறையைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2029 தேர்தலிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய முடியும் என அரசு கூறுகிறது.
இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை – நாடாளுமன்ற அமர்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள்:
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பெண்கள் இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
பிரதமர் மோடி கொடுத்த உத்தரவாதம்:
இதனிடையே, தொகுதி மறுவரையறை குறித்து தென் மாநிலங்கள் எழுப்பியுள்ள கவலைகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, “எந்தவொரு மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என எந்தத் திசையாக இருந்தாலும், சிறிய அல்லது பெரிய மாநிலமாக இருந்தாலும், இந்தச் செயல்முறையில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது” என்று உறுதியளித்தார்.