பிப்ரவரி 9, 2026: ‘பரீட்சா பே சர்சா 2026’ நிகழ்ச்சியின் இரண்டாவது அமர்வு இன்று (திங்கள்) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் நேரடியாக உரையாட உள்ளார். கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறும், பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் தூர்தர்ஷனில் காலை 10 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த முறை ‘பரீட்சா பே சர்சா’ நிகழ்ச்சியின் 9-ஆவது பதிப்பில் 4.5 கோடிக்கும் அதிகமான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் முதல் எபிசோடு பிப்ரவரி 6 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. அந்த அமர்வில் பிரதமர் மோடி மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் தனது சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் 1 நிமிடம் 19 விநாடிகள் கொண்ட ஒரு காணொளியையும் பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் மாணவர்களுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மனஅழுத்தமில்லா தேர்வுகள் – பிரதமர் மோடி:
Charcha on stress free exams continues…
Do watch the second episode of #ParikshaPeCharcha26. This episode features #ExamWarriors from Devmogra, Coimbatore, Raipur and Guwahati. Their questions and perspectives make this episode a must watch! pic.twitter.com/7QNa8HEsVC
— Narendra Modi (@narendramodi) February 8, 2026
இது தொடர்பாக பிரதமர் மோடி, “ மனஅழுத்தமில்லா தேர்வுகள் குறித்த உரையாடல் தொடர்கிறது… #ParikshaPeCharcha26 நிகழ்ச்சியின் இரண்டாவது அத்தியாயத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த அத்தியாயத்தில் தேவ்மோக்ரா, கோயம்புத்தூர், ராய்ப்பூர் மற்றும் குவாஹாட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடம்பெறுகின்றனர். அவர்களின் கேள்விகளும் பார்வைகளும் இந்த அத்தியாயத்தை தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்றாக மாற்றுகின்றன” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய எண்ணங்களை உருவாக்கும் உரையாடல்:
போர்டு தேர்வுகளுக்கு முன்னதாக மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட உரையாடலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர். ‘பரீட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பால யோகி அரங்கிலும் நடைபெற்றது. இதில் மாணவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “சிறிய சிறிய விஷயங்கள் மூலம் மிகப் பெரிய எண்ணங்களை பிரதமர் உருவாக்கியுள்ளார். அவர் தொடர்ந்து குழந்தைகளுடன் நேரடியாக உரையாடி வருகிறார். இந்த முறை நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று இந்த உரையாடலை மேலும் விரிவுபடுத்தியுள்ளார்” என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் ஈர்க்கும் பேச்சுத் திறன்:
மத்திய மாநில அமைச்சர் ஜெயந்த் சௌதரி கூறுகையில், “பிரதமர் மோடிக்கு மிகவும் தனித்துவமானதும் ஈர்க்கும் விதமான வெளிப்பாட்டு பாணியும் உள்ளது. நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். பிரதமர் மோடியை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததிலும், மாணவர்களின் வழியாக நாட்டின் ஒரு பிரதிபலிப்பைக் காண முடிந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களில் ஆர்வம், திறமை மற்றும் கற்றுக்கொள்ளும் ஆற்றல் தெளிவாக இருந்தது. பிரதமர் இல்லத்தில் நேரடியாக பிரதமரை சந்தித்து கேள்விகள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மாணவர்களுக்கு ஒரு சிறப்பு தருணமாக இருந்தது” என தெரிவித்தார்.
மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாடங்களை கற்பிக்கும் பிரதமர் மோடி:
பாஜக எம்.பி. ராஜ்குமார் சாஹர் ‘பரீட்சா பே சர்ச்சா குறித்து கூறுகையில், “இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதற்காக மாணவர்கள் மட்டுமின்றி நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். வாழ்க்கையின் கலை, வாழ்க்கையில் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும், எவ்வாறு மேலதிகமாகப் படிக்க வேண்டும் என்பதுபோன்ற பல விஷயங்களை இதில் இருந்து கற்றுக்கொள்ள முடிகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துகின்றன” என தெரிவித்தார்.