34 விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!
India Reopens 34 Airports After India-Pakistan Tension Eases | இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரு நாட்டு எல்லைகளிலும் அமைதி நிலவி வருகிறது. இந்த நிலையில், போர் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
டெல்லி, மே 12 : இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) பதற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை மூட அரசு உத்தரவிட்ட நிலையில், தற்போது மீண்டும் விமான நிலையங்களை திறக்க உத்தரவிடப்ப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மூடப்பட்டு இருந்த 34 விமான நிலையங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவுகிறது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விமான நிலையங்களை மூட உத்தரவிட்ட மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதனால் கடும் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தான் மீது பல கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக அட்டாரி – வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் தனது வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க கூடாது என அறிவித்தது. இதன் காரணமாக இந்திய விமானங்கள் மாற்று வழியில் பறந்தன. இதனை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் முற்றிய நிலையில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இந்த நிலையில் பாகிஸ்தான், விமான நிலையங்களை குறி வைத்து தாக்கலாம் என்ற சூழலில் இந்தியாவில் மொத்த 34 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன.
மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறக்க உத்தரவு
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நிலவி வந்த மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், போர் பதற்றம் தணிந்து அமைதி நிலவுவதால் படிப்படியாக கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், பயணிகள் விமான இயக்கத்திற்காக விமான நிலையங்கள் உடனடியாக திறக்கப்படுவதாக விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், பயணிகள் தங்களது விமானத்தின் நிலை குறித்து விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.