Operation Sindoor : பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

Operation Sindoor : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா மே 7, 2025 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை தாக்கியது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீர மரணமடைந்தார்.

Operation Sindoor : பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

ஆபரேஷன் சிந்தூர்

Updated On: 

08 May 2025 02:29 AM

கடந்த மே 7, 2025 அன்று அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரை பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா சார்பில் ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இந்தியாவின் (India) தாக்குதல் முசாபராபாத், கோட்லி, பஹாவல்பூர், ராவல்கோட், சக்ஸ்வரி, பீம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கப்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இங்குதான் செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூரில் 25 நிமிடங்களில் 70 பேர் இறந்தனர். மேலும் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா 24 ஏவுகணைகளை ஏவியது. இந்திய ராணுவமே இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இந்த தாக்குதல் சம்பவத்தில் 32 பேர் இறந்ததாக பாகிஸ்தான் கூறுகிறது.

பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் 15 பேர் பலி

இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டி நடத்திய ஷெல் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் ஜம்மு – காஷ்மீரில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது. இந்த நிலையில் கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லையில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதியில் ஷெல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மே 7, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீரமரணம் அடைந்தார்.இதனையடுத்து அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டி நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய இராணுவம் உடனடியாக கடுமையான பதிலடி கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக்குள் உள்ள ரோசௌரி, பூஞ்ச் பகுதியில் அமைந்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் பல பீரங்கி மையங்களை இந்திய இராணுவம் தீவிரமாக தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்

ஆபரேசன் சிந்தூர் சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட முன்னணி நாடுகளுக்கு தன்னுடைய நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் மூலம் விளக்கம் இந்தியா அளித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், ஏப்ரல் 22, 2025  அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி என்றும் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.