Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Indian Railways: இந்தியாவில் அதிவேகமாக இயக்கப்படும் ரயில்கள் என்னென்ன தெரியுமா?

ஏழைகளின் ரதம் என அழைக்கப்படும் ரயில்கள் இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் சாமானிய மனிதர்கள் முதல் நல்ல பொருளாதார வசதி கொண்டவர்கள் வரை அனைவராலும் தினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கட்டணம் குறைவு தொடங்கி பாதுகாப்பான பயணம் என்பதால் பலரும் ரயில்களையே அதிகம் விரும்புகிறார்கள்.

Indian Railways: இந்தியாவில் அதிவேகமாக இயக்கப்படும் ரயில்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவின் அதிவேக ரயில்கள்Image Source: x
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Apr 2025 21:10 PM

இந்தியாவில் சாலை வழி, ரயில் போக்குவரத்து, விமானம், கப்பல் என 4 வகையான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இதில் ரயில்கள் (Train Service) இந்தியாவின் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. நிர்வாக வசதிக்காக இந்திய ரயில்வே (Indian Railway) பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் 3 அல்லது 4 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது. பாசஞ்சர் ரயில்கள் தொடங்கி அதிவிரைவாக செல்லக்கூடிய வந்தே பாரத் வரை ரயில்கள் வந்து விட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்தியில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்திய ரயில்வே மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத விஷயமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான மாற்றங்கள் ரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதி நவீன நடைமேடை தொடங்கி, ரயில் நிலைய தூய்மை, பல்வேறு வழித்தடத்தில் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது வரை பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மில்லியன் கணக்கான பயணிகளுக்கு வசதியான, மலிவான, பாதுகாப்பான மற்றும் அழகிய பயணத்தை வழங்கும் இந்திய ரயில்வே இந்தியாவின் போக்குவரத்து நெட்வொர்க்கின் முதுகெலும்பாக இருந்து வருகிறது.இப்படியான நிலையில் இந்தியாவின் வேகமான ரயிலைப் பற்றி நாம் காண்போம்.

வந்தே பாரத் ரயில்

தற்கால சூழலில் வந்தே பாரத் இந்தியாவின் வேகமான ரயிலாக உள்ளது. தானியங்கி கதவுகள், உள் வைஃபை, பயோ-வெற்றிட கழிப்பறைகள் மற்றும் சாய்வு இருக்கைகள் போன்ற தரம் வாய்ந்த வசதிகளை இந்த ரயில் கொண்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது தற்போது டெல்லி-வாரணாசி மற்றும் மும்பை-அகமதாபாத் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.

கதிமான் எக்ஸ்பிரஸ்

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கதிமான் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரயில் ஆக்ரா வழியாக டெல்லியையும் ஜான்சியையும் இணைக்கிறது. இதனால் தாஜ்மஹாலுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு அந்த பயணத்தை மிக விரைவாக செயல்படுத்த உதவுகிறது. ஆடம்பரமான உட்புறங்கள், பயோ-கழிப்பறைகள், ரயில் பணியாளர்கள் மற்றும் நல்ல உணவு சேவைகள் ஆகியவை வழங்கப்படுவதால் இது பயணிகளுக்கு ரயிலில் விமான சேவை போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

சதாப்தி எக்ஸ்பிரஸ்

இந்தியாவின் வேகமான ரயில்களில் ஒன்றான சதாப்தி எக்ஸ்பிரஸ் 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்கள் முக்கிய நகரங்களை மாநில தலைநகரங்களுடன் இணைக்கும் பகல்நேர இன்டர்சிட்டி ரயில்களாகும். குறுகிய பயண கால அளவு மற்றும் மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரயில்கள் அதிகளவு பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லி-போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் மிக வேகமான ரயில் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

ராஜதானி எக்ஸ்பிரஸ்

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் எப்போதும் ரயில்வே துறையில் அடையாளம் மற்றும் வேகத்தின் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்தியாவில் வேகமான மற்றும் பிரீமியம் ரயில் பயணத்தை அறிமுகப்படுத்திய ரயில்களில் ராஜதானி விரைவு ரயில்களும் அடங்கும்.ராஜதானி எக்ஸ்பிரஸ் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ. ஆகும். இந்த ரயில்கள் புது டெல்லியை மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் பல மாநில தலைநகரங்களுடன் இணைக்கின்றது.

முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த ரயில்கள் உணவு, வசதியான படுக்கைகள் மற்றும் உயர்தர சேவையை வழங்குகின்றன, இது நீண்ட தூர பயணங்களுக்கு மிகவும் விரும்பப்படும் விருப்பங்களில் ஒன்றாக அமைகிறது.

துரந்தோ எக்ஸ்பிரஸ்

முக்கிய நகரங்களுக்கு இடையேயான இடைநில்லா நீண்ட தூர பயணத்தை எளிதாக்கும் வகையில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளது. குறைந்தபட்ச நிறுத்தங்கள், சிறந்த கேட்டரிங் சேவைகள் மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பெட்டிகளுடன் தடையற்ற பயணத்தை உறுதி செய்கின்றன. மும்பை-டெல்லி, கொல்கத்தா-டெல்லி மற்றும் பெங்களூரு-டெல்லி ஆகியவை இடையே துரந்தோ எக்ஸ்பிரஸ் சேவையாற்றி வருகிறது.