திருமணமான மூன்றே மாதங்களில் கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி.. அதிர்ச்சி சம்பவம்!
Woman Tries to Murder Husband | திருமணமான மூன்றே மாதங்களில் மனைவி, கணவனை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஏப்ரல் 10, 2025 அன்று இளம் ஜோடி திருமணம் செய்துக்கொண்ட நிலையில், ஆற்றுக்கு சுற்றி பார்க்க சென்றபோது கணவனை மனைவில் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
பெங்களூரு, ஜூலை 13 : பெங்களூரில் (Bengaluru) திருமணமான மூன்றே மாதங்களில் இளம் பெண் தனது கணவரை கொலை செய்த முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றுக்கு தம்பதி சுற்றி பார்க்க சென்ற புகைப்படம் எடுப்பதாக கூறி கணவனை, மனைவி கீழே ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். ஆனால் அவரது கணவனுக்கு நீச்சல் தெரிந்ததாலும், அங்கிருந்தவர்களின் உதவியுடனும் அந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கணவனை கொலை செய்ய மனைவி திட்டம் தீட்டியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி?
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் அருகே உள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் 29 வயதாகும் தாதப்பா. இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 27 வயதில் கந்தம்மா என்ற மனைவியும் உள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் 10, 2025 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 14, 2025) காலை தம்பதி ராய்ச்சூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
கணவரை ஆற்றில் தள்ளிவிட்ட மனைவி
அங்கு இயற்கையை ரசித்த அவர்கள் ஆற்று பாலத்தின் மீது நின்று செல்பி எடுத்துள்ளனர். பின்னர் இருவரும் தனித்தனியாக புகைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கந்தம்மா ஆற்று பாலத்தின் தடுப்பு சுவரின் மீது நின்று முதலில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது கணவர் தாதப்பாவை ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவர் மீது நிற்கும்படி கந்தம்மா கூறியுள்ளார். புகைப்படம் எடுப்பதற்காக தாதப்பா ஆற்றுப்பாலத்தின் மீது நின்ற நிலையில் கந்தம்மா அவரை ஆற்றில் தள்ளிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கடனாக கொடுத்த ரூ.2,000 பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. இளைஞர் குத்தி படுகொலை!
பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்ட தாதப்பா
தாதப்பாவுக்கு நீச்சல் தெரிந்த நிலையில் அவர் நீச்சல் அடித்து வெளியே வர முயற்சி செய்துள்ளார். ஆனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் அவரால் வெளியே வர முடியாமல் ஆகியுள்ளது. இதனை கண்டு அங்கு இருந்த பணியாளர்கள் ஓடி வந்து தாதப்பாவை மீட்டுள்ளனர். மேலே வந்த அவர் என்னை ஏன் கீழே தள்ளி விட்டாய் என தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி புகைப்படம் எடுக்கும் போது அவரே தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இவ்வாறு இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தம்பதியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தாதப்பா தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கந்தம்மாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.