போர் எதிரொலி.. இன்று முதல் விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு..
Flights imposing fuel surcharge: இந்தக் கூடுதல் கட்டணம் இன்று (மார்ச் 14, 2026) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, பயணிகள் செல்லும் பயணத் தூரத்தின் அடிப்படையில் இந்தக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, 500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் குறுகிய தூரப் பயணங்களுக்கு ரூ.425 கூடுதலாக வசூலிக்கப்படும்.

கோப்புப் புகைப்படம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் நேரடிப் பாதிப்பாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 டாலரைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வால் விமான எரிபொருளான ஏடிஎப் (ATF) விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிதிச் சுமையைச் சமாளிக்க முடியாமல், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோ (IndiGo) மற்றும் ஏர் இந்தியா (Air India) ஆகியவை கூடுதல் எரிபொருள் கட்டணத்தை (Fuel Surcharge) அமல்படுத்தியுள்ளன. விமான எரிபொருள் விலை உயர்வால் நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சிலிண்டர் சிக்கல்.. அமலானது அத்தியாவசிய பொருட்கள் சட்டம்.. இனி என்ன நடக்கும்?
கூடுதல் கட்டண விவரம்:
இந்தக் கூடுதல் கட்டணம் இன்று (மார்ச் 14, 2026) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, பயணிகள் செல்லும் பயணத் தூரத்தின் அடிப்படையில் இந்தக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, 500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் குறுகிய தூரப் பயணங்களுக்கு ரூ.425 கூடுதலாக வசூலிக்கப்படும். இதுவே 3,500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் நீண்ட தூர சர்வதேசப் பயணங்களுக்கு ரூ.2,300 வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியாவும் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இதே போன்ற கட்டண உயர்வைச் செயல்படுத்தியுள்ளது.
- இந்தியாவிற்குள் (உள்நாடு): ரூ. 425
- இந்தியத் துணைக்கண்டம்: ரூ. 425
- மத்திய கிழக்கு நாடுகள்: ரூ. 900
- தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா: ரூ. 1,800
- ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா: ரூ. 1,800
- ஐரோப்பா: ரூ. 2,300
வான்வெளி மாற்றமும் காரணம்:
இந்தக் கட்டண உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கியக் காரணம் வான்வெளி மாற்றங்கள் ஆகும். போர் நடக்கும் வான் எல்லைகளுக்கு மேல் விமானங்களை இயக்க முடியாத பாதுகாப்புச் சூழல் நிலவுவதால், பல சர்வதேச விமானங்கள் அந்தப் பகுதியைச் சுற்றி நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இது எரிபொருள் பயன்பாட்டைச் சுமார் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட, பயணிகளிடம் இந்தக் கட்டணத்தை வசூலிப்பதைத் தவிர வேறு வழியில்லை என நிறுவனங்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : எல்பிஜி தட்டுப்பாடு.. ரயில்வே கேட்டரிங் பாதிக்கப்படுமா? நிலமை என்ன?
பயணிகள் அதிர்ச்சி:
இந்தத் திடீர் கட்டண உயர்வு கோடை விடுமுறைக்காகச் சுற்றுலாத் திட்டமிட்டுள்ள நடுத்தரக் குடும்பங்களுக்கும், தொழில் நிமித்தமாக அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், இப்போது விதிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் எரிபொருள் கட்டணம் பயணச் செலவை மேலும் அதிகரிக்கும். ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் போன்ற பிற தனியார் விமான நிறுவனங்களும் விரைவில் இதே போன்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.