242 பயணிகளுடன் தரையில் விழுந்து நொருங்கிய விமானம்.. தலைவர்கள் இரங்கல்..

Air India Crash: அகமதாபாதில் 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

242 பயணிகளுடன் தரையில் விழுந்து நொருங்கிய விமானம்.. தலைவர்கள் இரங்கல்..

விமானம் விபத்துக்குள்ளான இடம்

Published: 

12 Jun 2025 18:18 PM

அகமதாபாத், ஜூன் 12 2025: அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் (Air India Airlines) 169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர், ஏழு பேர் போர்ச்சுகீஸ் நாட்டவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே தரையில் விழுந்து நொருங்கியது. இந்த விபத்தில் தற்போது வரை 133 பேரில் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் குஜராத்தின் காந்திநகரிலிருந்து அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்:


இந்த விமான விபத்தை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனதி எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான பதிவில் காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


இந்த விபத்து தொடர்பாக பிரியங்கா காந்தி வத்ரே இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். ” ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு என் இதயம் இரங்குகிறது. இந்த பயங்கரமான விபத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கையை முழு நாடும் எதிர்நோக்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “ அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்தேன். விபத்து நடந்த இடத்திற்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் பேசினேன்” என தெரிவித்துள்ளார்.

உலக தலைவர்கள் இரங்கல்:


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், “ இந்தியாவில் பயணிகள் விமான விபத்து பற்றிய பயங்கரமான செய்தி. இந்த துயரமான நாளில் பிரதமர் மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல், அகமதாபாத்தில் பயணிகள் விமான விபத்து பற்றிய செய்தி மிகவும் துயரமானது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவருடனும் ஆஸ்திரேலியாவின் எண்ணங்கள் உள்ளன என ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல பிரிட்டிஷ் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு லண்டனுக்குச் புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளானது. நிலைமை குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது, இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன என இங்கிலாந்து பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.