Cinema Rewind: 90ஸ் கிட்ஸின் சூப் சாங்… காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?

Untold Story of Aan Paavam Movie : ஆண்பாவம் படத்தின் பிரபலமான "காதல் கசக்குதையா" பாடல் உருவான விதத்தை இயக்குனர், நடிகர் ஆர். பாண்டியராஜன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதில் முழு படப்பிடிப்பு முடிந்த பின்னரே இளையராஜாவிடம் பாடல்கள் கிடைக்கப்பெற்றது.

Cinema Rewind: 90ஸ் கிட்ஸின் சூப் சாங்... காதல் கசக்குதையா உருவான கதை தெரியுமா?

பாண்டியராஜன்

Published: 

30 May 2025 08:32 AM

தமிழ் சினிமாவின்திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் கே. பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து பிரபு நடித்த கன்னி ராசி படத்தின் மூலம் இயக்குனராகவும், இதனைத் தொடர்ந்து ஆண்பாவம் (Aan Paavam) படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் ஆர். பாண்டியராஜன் (R PandiyaRajan). குறைவான உயரம், திருட்டு முழி என தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளப்படுத்தப்படும் பாண்டியராஜனுக்கு திறமைகள் ஏராளம். தொடர்ந்து ஹீரோவாகவும் இயக்குனராகவும் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். நெத்தியடி என்ற படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இப்படி பன்முக திறமையாளராக வளம் வரும் பாண்டியராஜன் இந்த தலைமுறை ரசிகர்களுக்கு நகைச்சுவை நடிகராகவே அறியப்படுகிறார். இப்படியான நிலையில் அவர் ஆண்பாவம் படத்தில் இடம்பெற்ற காதல் கசக்குதையா பாடல் உருவான விதம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசி இருப்பார்.  அதனைப் பற்றிப் பார்க்கலாம்.

பாடல் உருவான கதை

அதாவது, நான் இளையராஜாவிடம் காதல் கசக்குதையா பாடலுக்கான சூழலை சொல்லிவிட்டேன். என்ன ஒரு வித்யாசம் என்றால் ஆண்பாவம் படம் முழுவதுமாக எடுக்கப்பட்ட பிறகு தான் எனக்கு பாடல்கள் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னால் இளையராஜாவை நான் பலமுறை சந்தித்து தேதி கேட்டேன். ஆனால் அது கிடைக்காமல் இருந்தது. சூட்டிங் ஆரம்பித்து கொள்ளட்டுமா என கேட்க, பூஜை போட்டு வா என இளையராஜா சொன்னார். படம் எடுத்துட்டு வந்து ஷூட்டிங் முடிந்துவிட்டது என சொன்னால் ஆச்சரியப்பட்டார்.

சரி டப்பிங் பேசிட்டு வா என மறுபடியும் சொல்ல எல்லாம் முடிந்துவிட்டது என நான் அவரிடம் கூறினேன். இதனை தொடர்ந்து அன்று இரவே அவர் முழு படத்தையும் பார்த்தார். மறுநாள் காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அனைத்து பாடல்களுக்கும் டியூன் போடப்பட்டது. 9 மணிக்கு மேல் படத்திற்கு பின்னணி இசை இளையராஜாவால் அமைக்கப்பட்டது. ஒரு மணிக்குள் முடித்தார்.

சரியாக நியாபகம் வைத்த இளையராஜா

நான் காதல் கசக்குதையா பாடலை முதலில் இளையராஜாவிடம் சொல்லும்போது எனக்கு பெரிய அளவில் எந்த உணர்வும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நான் ஒரு புதுமுகம், நம்மளுடைய முகத்தை ரசிகர்கள் பார்த்தால் ஏதேனும் விபரீதம் நடந்து விடும் என அந்த சூழலை விட்டு விட்டேன். ஆனால் இளையராஜா அதனை சரியாக நினைவில் வைத்து உனக்கு ஒரு டியூன் கேட்டியே என கேட்டார். அதே சமயம் இந்த டியூனை வாங்கிவிட்டு அடுத்த படத்தில் உபயோகித்துக் கொள்ளலாம் என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தப் பாடல் அவரால் பாடப்பட்டு அட்டகாசமாக திரையில் என்னுடைய அறிமுக பாடலாக அமைந்தது.

இளையராஜா ஒரு பாடலுக்கு ஐந்து விதமான டியூன்கள் அமைத்துக் கொடுப்பார். அந்தப் படத்தில் இடம்பெற்ற குயிலே குயிலே பாடல் பத்து நிமிடங்களில் இசையமைக்கப்பட்டது” என பாண்டியராஜன் கூறியிருப்பார்.

ஆண் பாவம் படம்

பாண்டியராஜன் இயக்கி நடித்த இப்படத்தில் பாண்டியன், விகே ராமசாமி, ஜனகராஜ், சீதா, ரேவதி, கொல்லங்குடி கருப்பாயி, தவக்களை உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படம் இன்றைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு இருக்கும் என்றால் பாண்டியராஜன் எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்பது புரியும்.