மேடையில் மயங்கி விழுந்த விஷால் – அவருக்கு என்ன ஆச்சு?

Vishal collapses on stage : விழுப்புரத்தில் நடைபெறும் மிஸ் திருநங்கை 2025 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷால் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது மேனேஜர் ஹரி, விஷாலின் உடல் நிலை குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?

விஷால்

Updated On: 

12 May 2025 08:19 AM

சுந்தர்.சி (Sundar C) இயக்கத்தில் விஷால் (Vishal), சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான படம் மத கஜ ராஜா. இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டிலேயே உருவாகியிருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் வெளியாகமலேயே இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து வெளியான இந்தப் படம் அனைவரும் ஆச்சரியப்படும்படி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமைந்தது. சுந்தர்.சியின் டிரேட் மார்க் காமெடி இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானத்தை ரசிகர்கள் காமெடியனாக பார்க்கும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. மேலும் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

மத கஜ ராஜா நிகழ்ச்சியில் கை நடுக்கத்துடன் காணப்பட்ட விஷால்

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் கை நடுக்கத்துடன் காணப்பட்டார். அவரால் மேடையில் சரியாக பேச முடியவில்லை. அவரை எப்பொழுதும் கம்பீரமாக ஆக்சன் ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு அவரை அந்த நிலையில் பார்த்தது பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

இந்த நிலையில் அடுத்த சில நாட்களிலேயே படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட விஷால் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அன்று தனக்கு வைரல் காய்ச்சல் இருந்ததாகவும் விளக்கமளித்திருந்தார். மேலும் செய்தியாளர்களிடம் இருந்து மைக்கை வாங்கி பேசி தான் நன்றாக இருப்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்.

மேடையில் மயங்கி விழுந்த விஷால்

இந்த நிலையில் நடிகர் விஷால் விழுப்புரத்தில் நடைபெறும் மிஸ் திருநங்கை 2025 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் நிகழ்ச்சியின்போது மேடையில் நின்றிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவரை முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில் விஷாலுக்கு என்ன ஆச்சு என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஷால் நலமாக இருப்பதாக தகவல்

 

இந்த நிலையில் விஷால் தற்போது நலமாக இருப்பதாக அவரது மேனேஜர் ஹரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் மதியத்தில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை, அதனால் தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார். தற்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நலமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது அவர் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கி வந்த நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு பதிலாக தானே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்தார். இந்தப் படத்தில் பிரசன்னா மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விரைவில் இந்தப் படம் தொடர்பாகவோ அல்லது விஷால் நடிக்கும் புதிய படம் தொடர்பாக அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.