மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? தேர்தல் ஆணையத்துக்கு சென்ற புகார்… பரிதவிப்பில் பாமகவினர்!
PMK Mango Symbol: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா?
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, தமையன் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2024- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அறிவித்ததை அன்புமணி எதிர்த்ததால் அன்று முதல் இந்த மோதல் போக்கு தொடங்கியது. இதனால், பாமக இரு அணியாக பிரிந்து செயல்படத் தொடங்கியது. இதில், அன்புமணி தரப்பை சேர்ந்தவர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும், ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்களை அன்புமணி கட்சியில் இருந்து நீக்குவதும் தொடர் கதையாகி வந்தது. இந்த மோதல் போக்கு மெல்ல மெல்ல வளர்ந்து பாமக மற்றும் மாம்பழம் சின்னம் யாருக்கு சொந்தம் என்ற நிலைக்கு சென்றது. அதன்படி, அன்புமணியும், ராமதாஸும் தனித்தனியாக டெல்லியில் முகாமிட்டு தேர்தல் ஆணையத்திடம் கட்சிக்கு உரிமை கோரி அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என எச்சரிக்கை
இதில், அன்புமணி தான் பாமகவின் தலைவர் என அறிவித்தது. இதை சற்றும் ஏற்றுக் கொள்ளாத ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அங்கீகாரம் பெறாத கட்சியின் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனவும், பாமக தலைவர் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தை முன்மொழிவதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாம்பழம் சின்னத்துக்கு இருவரும் உரிமை கோரினால், அந்த சின்னம் யாருக்கும் வழங்கப்படாமல் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: காங்கிரஸ் கேட்கும் 35 இடங்கள்.. இன்று நடக்கும் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மனு
தற்போது, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், மாம்பழம் சின்னத்தையும் முடக்க கோரி ராமதாஸ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், பாமகவின் தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டது. கடந்த 2025 டிசம்பரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்து இடும் உரிமை ராமதாசுக்கு மட்டுமே உள்ளது. மாம்பழம் சின்னத்தை இருவர் கேட்கும் நிலையில் அதனை முடக்கி, இருவருக்கும் புது சின்னம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு
தற்போதைய சூழ்நிலையில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது போல பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். இதனிடையே, பாமக மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்று திரும்ப பெறப்பட்டது. இதற்கு மாறாக, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!