புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி.. டெல்லிக்கு பறந்த கோப்பு… மௌனம் காக்கும் முதல்வர் ரங்கசாமி!
Puducherry Deputy CM Post: புதுச்சேரி மாநிலத்தில் துணை முதல்வர் பதவியை உருவாக்க அனுமதி கோரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியி்ல் துணை முதல்வர் பதவி
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி ( வியாழக்கிழமை) ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் என். ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் – திமுக கூட்டணி, அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில், முன் எப்போதும் இல்லாமல் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய வரலாற்றை பதிவு செய்திருந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி ( திங்கள் கிழமை) நடைபெற உள்ளது. இதில், எந்த கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் துணை முதல்வர் பதவியை உருவாக்க அனுமதி கோரி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2021- இல் துணை முதல்வர் பதவி உருவாக்க முயற்சி
இந்த விவகாரம் தற்போது புதுச்சேரி மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என். ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி பதவி ஏற்றார். அப்போது, முதல்வர் ரங்கசாமிக்கு அடுத்தபடியாக நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால், முதல்வர் ரங்கசாமிக்கு இதை உடன்பாடு இல்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் படிக்க: “கரூர்ல தோற்போம்னு தெரிஞ்சு கோவைக்கு ஓடி வந்த அரக்கன்”… செந்தில் பாலாஜியைச் சாடிய இபிஎஸ்!
மாநில உள்துறை அமைச்சராக நமச்சிவாயம் நியமனம்
இதன் காரணமாக, பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் அமைச்சரவையில் 2- ஆவது அமைச்சராக, அதாவது மாநில உள்துறை அமைச்சராக இடம் பெற்றார். இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டு அதில் மீண்டும் நமச்சிவாயத்தை நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி மாநில அமைச்சரவையில் முதல்வருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் இருந்து வருகின்றனர்.
மெளனத்தில் இருக்கும் முதல்வர் ரங்கசாமி
இந்த நிலையில், துணை முதல்வர் பதவியை உருவாக்குவதற்கு பாஜக முயன்று வரும் நிலையில், அதற்கு முதல்வர் ரங்கசாமி சரியான பிடி கொடுக்காமலும், மெளனத்தில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு வேலை மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில், புதுச்சேரி துணை முதல்வராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..