தேனியில் அடுத்த அதிர்ச்சி.. காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கிய போலீஸ்.. பறந்த உத்தரவு!
Theni Custodial Assault : தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்ககளில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஆறு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இளைஞரை தாக்கிய போலீஸ்
தேனி, ஜூலை 02 : தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்ககளில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஆறு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவலர்களாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.. இந்த விவகாரத்தில் பல போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்த வரும் நிலையில், தற்போது, இதே போன்று ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவநாதன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இளைஞரை கொடூரமாக தாக்கிய போலீஸ்
இவர் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி, 2025 ஜனவரி 14ஆம் தேதி அன்று அவரை அழைத்து சென்று போலீசார் தேவநாதன்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த காவல் நிலையத்தின் ஆய்வாளராக இருப்பவர் அபுதல்ஹா.
அவர் தலைமையில் போலீசார் சிலர் இளைஞர் ரமேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை லத்தியால் 4 அல்லது 5 காலவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், காவலர்கள், இளைஞர் ரமேஷை அழைத்து வந்து ஷூ காலால் எட்டி உதைத்துள்ளன்ர. மேலும், லத்தியால் ரமேஷை தாக்கி உள்ளனர். அவர் காவலர்களின் காலை பிடித்து கெஞ்சி கேட்டு இருக்கிறார். இருப்பினும், இளைஞர் ரமேஷை விடாமல் தொடர்ந்து காலால் காவலர்கள் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தேனி மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவு
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினரின் ஆராஜக போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியதை அடுத்து, இது தொடர்பாக ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணை அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்துள்ளார். போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்களும் வெளியானது. காவல் துறையினர் தொடர்ந்து தாக்கியதாகவும், சித்ரவதை செய்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.