Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே தீர்ப்பில் மாறிய காட்சிகள்.. ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த 10 மசோதாக்கள்!

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான நீண்டகால மோதல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவுக்கு வந்துள்ளது. மாநில அரசின் பரிந்துரைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே தீர்ப்பில் மாறிய காட்சிகள்.. ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த 10 மசோதாக்கள்!
ஆர்.என்.ரவி Image Source: X
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 Apr 2025 15:52 PM IST

தமிழ்நாடு அரசுக்கும் (Tamilnadu Government), ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் (Governor RN Ravi) இடையேயான மோதல் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும்,  திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பமானது. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாதது மோதலுக்கு அடித்தளமாக அமைந்தது. இப்படியான நிலையில் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ள 10 மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மாநில அரசின் பரிந்துரைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அவர்களுக்கு என தனி அதிகாரம் கிடையாது. சட்டசபையில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த மசோதாக்கள் தொடர்பான தகவல்களைக் காணலாம்.

பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதா

இந்த மசோதா தான் வழக்கிற்கே அடிப்படையாக அமைந்தது. அதாவது பல்கலைக்கழக துணைவேந்தர்களை வேந்தராக இருக்கும் ஆளுநர் தான் நியமித்து வந்தார்கள். இதனை மாற்றி பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமனம் செய்து, துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமையை அவருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இது தொடர்பான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ரவிக்கு அனுப்பப்பட்டு அவர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரியில் இரண்டு நாட்கள் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பங்கேற்கும் மாநாட்டை ஆளுநர் நடத்தினார். அங்குள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு திமுக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பல்கலைக்கழக இணைவேந்தரான அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி அழைக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது.

தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி குழு ஒன்றை அமைத்து பரபரப்பை உண்டாக்கினார். தமிழ்நாடு அரசு இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை ஆளுநர் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.  அதில் துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு, நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது ஆகியவை பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாட்டில் இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு உண்டான சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் சட்டசபையில் கொண்டு வந்தார். அதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த சட்ட மசோதாவின் படி சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரும் துணைவேந்தராக மருத்துவத் துறை அமைச்சரும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீன்வள பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்தின் பெயரை  “ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்” என பெயர் மாற்றம் செய்வது மற்றும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மாநில அரசு நியமிக்கும் அதிகாரம் வழங்கும் மசோதாவானது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனைத் தவிர்த்து தமிழ்நாட்டு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக  சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சட்ட  திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ஆகிய மேற்குறிப்பிட்ட இந்த 7 பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் இவை அனைத்தும் இன்றே நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.