இந்தியா – ஐரோப்பா ஒப்பந்தம்: வர்த்தகத்திற்கே முக்கியத்துவம்.. உக்ரைன் அல்ல – அமெரிக்கா கடும் விமர்சனம்..

India EU Trade: அவர்கள் தங்களுக்குச் சிறந்ததாக இருப்பதைச் செய்யலாம். ஆனால், ஐரோப்பியர்கள் என்னை மிகவும் ஏமாற்றியுள்ளனர்” என பெஸன்ட் தெரிவித்தார். ரஷ்ய எண்ணெயை பயன்படுத்தி இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஐரோப்பிய நாடுகள் வாங்கி வருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாஷிங்டனின் கடுமையான வர்த்தகக் கொள்கைகளுடன் இணைவதைத் தவிர்த்து வருவதாகவும் பெஸன்ட் குற்றம்சாட்டினார்.

இந்தியா - ஐரோப்பா ஒப்பந்தம்: வர்த்தகத்திற்கே முக்கியத்துவம்.. உக்ரைன் அல்ல - அமெரிக்கா கடும் விமர்சனம்..

கோப்பு புகைப்படம்

Published: 

29 Jan 2026 09:59 AM

 IST

ஜனவரி 29, 2026: அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட், இந்தியாவுடன் ஐரோப்பா சமீபத்தில் இறுதிசெய்துள்ள வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். இந்த ஒப்பந்தம், உக்ரைன் மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறிவரும் நிலைப்பாட்டை விட, வணிக நலன்களையே முன்னிலைப்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். CNBC தொலைக்காட்சியுடன் பேசிய பெஸன்ட், பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் இடையே இறுதிசெய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் இந்த ஒப்பந்தத்தை “அனைத்து ஒப்பந்தங்களின் தாய்” (mother of all deals) எனப் புகழ்ந்திருந்தார்.

இந்தியா – ஐரோப்பியா ஒப்பந்தம் – அமெரிக்கா ஏமாற்றம்:

“அவர்கள் தங்களுக்குச் சிறந்ததாக இருப்பதைச் செய்யலாம். ஆனால், ஐரோப்பியர்கள் என்னை மிகவும் ஏமாற்றியுள்ளனர்” என பெஸன்ட் தெரிவித்தார். ரஷ்ய எண்ணெயை பயன்படுத்தி இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஐரோப்பிய நாடுகள் வாங்கி வருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாஷிங்டனின் கடுமையான வர்த்தகக் கொள்கைகளுடன் இணைவதைத் தவிர்த்து வருவதாகவும் பெஸன்ட் குற்றம்சாட்டினார். கடந்த ஆண்டு இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் 25 சதவீத சுங்க வரியை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்க மறுத்ததற்கு, இந்தியாவுடன் தனித்த வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சியே காரணம் என அவர் கூறினார்.

“ஐரோப்பியர்கள் எங்களுடன் இணையத் தயாராக இல்லை. அதற்குக் காரணம், அவர்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்ய விரும்பியதுதான்” என பெஸன்ட் தெரிவித்தார்.

வர்த்தகத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் ஐரோப்பா:

மேலும், உக்ரைன் குறித்து ஐரோப்பா தொடர்ந்து பேசிவரும் கருத்துகளையே இந்த நடவடிக்கைகள் பலவீனப்படுத்துவதாக அவர் கூறினார். “உக்ரைன் மக்களின் முக்கியத்துவம் பற்றி ஐரோப்பியர்கள் பேசும் ஒவ்வொரு முறையும், அவர்கள் உக்ரைன் மக்களை விட வர்த்தகத்திற்கே முன்னுரிமை கொடுத்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: துபாயில் திறக்கப்பட்ட தங்க வளாகம்.. ஒரே இடத்தில் 1,000 கடைகள்!

“அனைத்து ஒப்பந்தங்களின் தாய்” என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதோடு, உலகளாவிய வர்த்தக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின்மீது ஐரோப்பாவின் சார்பை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மதிப்பின் அடிப்படையில் சுமார் 97 சதவீத பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரிகள் நீக்கப்படவோ குறைக்கப்படவோ செய்யப்படும் என்றும், 2032க்குள் இந்தியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்றும், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் யுரோ சுங்கச் செலவு சேமிக்கப்படும் என்றும் பிரசெல்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – ஐரோப்பா இடையே இருக்கும் பதற்றம்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், அமெரிக்கா–ஐரோப்பா இடையிலான வர்த்தக உறவுகள் பதற்றமடைந்துள்ள சூழலில் பெஸன்டின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் வாஷிங்டனுடன் செய்யப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட சுங்க வரிக் குறைப்புகளை ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறைப்படுத்தாதது குறித்து அமெரிக்க அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த பதற்றம், தென் கொரியா உள்ளிட்ட பிற வர்த்தகக் கூட்டாளர்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள சமீபத்திய சுங்க நடவடிக்கைகளாலும் மேலும் அதிகரித்துள்ளது. இருதரப்பு வர்த்தக கட்டமைப்பு ஒப்பந்தத்தை மெதுவாக நடைமுறைப்படுத்தியதாகக் கூறி, இந்த வாரம் தென் கொரியாவுக்கு விதிக்கப்படும் சுங்க வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

சுங்க வரி அதிகரிப்புதான் காரணமா?

சுங்க வரிகளை அழுத்தமாக பயன்படுத்துவது நிர்வாகத்தின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகிறது என பெஸன்ட் விளக்கினார். “இத்தகைய நடவடிக்கைகள் விஷயங்களை முன்னேற்ற உதவுகின்றன” என அவர் கூறினார். ABC News-க்கு பேட்டியளித்த பெஸன்ட், தொடர்ந்து எரிசக்தி வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் ஐரோப்பிய அரசுகள் தங்களது பாதுகாப்பு நிலைப்பாட்டையே பலவீனப்படுத்துகின்றன என தெரிவித்தார்.

“ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு நாங்கள் 25 சதவீத சுங்க வரி விதித்தோம். கடந்த வாரம் என்ன நடந்தது தெரியுமா? ஐரோப்பியர்கள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்” என அவர் தெரிவித்தார்.

ரஷ்ய எண்ணெய் வாங்கியதுடன் தொடர்புடைய 25 சதவீத சுங்க வரி உட்பட, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிகபட்சமாக 50 சதவீதம் வரை சுங்க வரிகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டிப்பாக்கப்பட்டதால், வாஷிங்டன்–நியூ டெல்லி இடையிலான வர்த்தக பதற்றம் அதிகரித்தது.

எனினும், சமீபத்தில் பெஸன்ட் சுங்க வரி தளர்வு சாத்தியமாக இருக்கலாம் என சைகை காட்டியுள்ளார். உலக பொருளாதார மன்றத்தின் ஓரத்தில் Politico-வுடன் பேசிய அவர், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் கணிசமாக குறைந்துள்ளதாக கூறினார்.

“சுங்க வரிகள் இன்னும் அமலில் உள்ளன. ரஷ்ய எண்ணெய்க்கான 25 சதவீத சுங்க வரி தொடர்கிறது. ஆனால் அவற்றை நீக்கும் பாதை ஒன்று இருக்கலாம்” என அவர் தெரிவித்தார்.

Related Stories
எடப்பாடி பழனிசாமி தயாரா…திடீரென சவால் விட்ட ஓபிஎஸ்..என்ன காரணம்?
தவெக 3- ஆம் ஆண்டு தொடக்க விழா…சென்னையில் 2- ஆம் தேதி நடைபெறுகிறது…பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!
2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
காவல் நிலையத்தில் தந்தை-மகள் விஷம் குடித்த சம்பவம்..தென்காசியில் 3 காவலர்கள் சஸ்பெண்ட்…எஸ்.பி.மாதவன் அதிரடி உத்தரவு!
வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை..கிலோ கணக்கில் கடல் அட்டைகள்-குதிரைகள் பறிமுதல்..ராமநாதபுரத்தில் பரபரப்பு!
ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்
பைக்கில் செல்வது தோனி - கோலியா? வைரலாகும் வீடியோ
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?