வீக் எண்டில் ஊருக்கு செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. வெளியான அறிவிப்பு!
TNSTC Special Buses : முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 2025 ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை, ஜூன் 25 : வார இறுதி நாட்கள், முகூர்த்த நாட்களை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் (TNSTC Special Buses) இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, 2025 ஜூன் 27,28,29ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது பேருந்து சேவை. போக்குவரத்து சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், இதுபோன்ற நாட்களில் பயணிகளின் சிரமத்தை போக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, பண்டிகை நாட்களில் மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அதாவது, வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாளையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 2025 ஜூன் 27, 28,29ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஜூன் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 275 பேருந்தும், 2025 ஜூன் 28ஆம் தேதி சனிக்கிழமை 320 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற முக்கிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு தெரியுமா?
கோயம்பேட்டில் இருந்து ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு மற்றும் திருவண்ணாமலைக்கு 55 சிறப்பு சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கூடுதலாக, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் 20 பேருந்துகள் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 29ஆம் தேதி ஞாயிற்றுகிழமை பயணிகளின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
2025 ஜூன் 27ஆம் தேதி 6,240 பயணிகளும், 2 ஜூன் 28ஆம் தேதி 2,182 பயணிகளும், ஜூன் 6,727 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை TNSTC இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.