‘முடிச்சு போடாதீங்க’ கூட்டணி குறித்து கறாராக சொன்ன திருமாவளவன்.. என்ன மேட்டர்?
Thirumavalavan On DMK Alliance : மேடையில் பேசுவதையும் கூட்டணி விவகாரத்தையும் முடிச்சுப் போட வேண்டாம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக கலந்து கொண்டது குறித்தும் அவர் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

சென்னை, ஜூன் 25 : கட்சி தோழர்களை அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தும் வகையில் மேடைகளில் பேசுவதையும், கூட்டணி விவகாரத்தையும் (DMK Alliance) முடிச்சு போட்டு பார்க்க வேண்டிய தேவை இல்லை என விசிக தலைவர் தொல்.திருமாமளவன் (Thirumavalavan) கூறியுள்ளார். மேலும், அண்ணா மற்றும் பெரியாரை பழித்த பிறகு, அதிமுக பாஜகவோடு பயணிக்க போகிறார்களா என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், “இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தேசிய அளவில் வளர்த்திட வேண்டும் என்ற நோக்கில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதிக நிதியை ஒதுக்கி சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டி வருகிறார்கள். தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
”அதிமுக சிந்திக்க வேண்டும்”
ஆங்கிலத்தை தூக்கி எறிய வேண்டும் என்று வெளிப்படையாக பேசுகிறவர்கள் தமிழ் போன்ற பிற மொழிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் இந்த மண்ணின் மக்களை, பூர்வீக குடிகளை பிற மொழி பேசும் தேசிய இனங்களை நசுக்குவதில் குறியாக இருக்கிறார்கள். இதை எல்லாம் பாஜகவையும், சங்பரிபாக்களையும் ஆதரிக்க கூடியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பேசுவதற்கு ஆளில்லாத மொழி சமஸ்கிருதம், செத்த மொழி சமஸ்கிருதம். அந்த மொழிக்கு கோடிக்கணக்கு நீதி ஒதுக்கீடு செய்கிற பாஜக அரசின் போக்கை அவர்களின் உண்மை நோக்கத்தை ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு இல்லை. முருக பக்தர்கள் மாநாடு நடந்திருந்தால் அண்ணா, பெரியாரை விமர்சிக்கும் வீடியோ வெளியிடப்பட்டு இருக்காது. பெரியார் அண்ணா போன்ற தலைவர்களை தமிழ் மண்ணில் எங்களால் விமர்சிக்கும் முடியும் என சங்பரிவார்கள் செயல்பட்டு வருகிறார். ஆனால், அதிமுக அந்த மாநாட்டில் கலந்து கொண்டது தான் அதிர்ச்சி அளிக்கிறது.
”முடிச்சு போடாதீங்க”
வெறும் தேர்தல் ஆதாயம் கருதி அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை விமர்சித்தாலும், அவர்களுடன் தான் தேர்தல் சந்திப்போம் என அதிமுக இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபற்றி அதிமுக சிந்திக்க வேண்டும். அண்ணாவின் பழித்த பிறகு, பெரியாரை பழித்த பிறகு பாஜகவோடு, சங்பரிவார்களோடு இவர்கள் தொடர்ந்து பயணிக்க போகிறார்களா என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடக்கும் போது தான், எத்தனை தொகுதிகள்? இடங்கள்? என்பதை தீர்மானிக்க முடியும். இயக்கத் தோழர்களை அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தும் வகையில் மேடைகளில் பேசுவதையும், பேச்சுவார்த்தை நடத்துவதையும் முடிச்சு போட்டு பார்க்க வேண்டிய தேவை இல்லை” என தெரிவித்தார்.