தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் களம்.. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
TN CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் ஜுன் 28, 2025 அன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்துகிறார், இதில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்
ஜூன் 28 2025 தேதியான இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற இருக்கிறது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அதற்காக முன்கூட்டியே தயாராகி வருகிறது திமுக. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கட்சி பணிகள் குறித்து உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சியின் மூலம் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தொகுதி பணிகள் எப்படி இருக்கிறது, மக்கள் மனநிலை எவ்வாறு இருக்கிறது, மக்களுக்கான தேவைகள் என்ன, குறைபாடுகள் என்ன என்பது குறித்து கேட்டு அறியப்பட்டு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று நடக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்நிலையில் ஜூன் 28, 2025 தேதியான் இன்று காணொலி காட்சி மூலமாக இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:
காணொலிக் காட்சி வாயிலாக கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்.
– கழக பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு#DMK4TN pic.twitter.com/zVagYD3ADf
— DMK (@arivalayam) June 27, 2025
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 28-06-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் எடப்பாடி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதேபோல தொடர்ந்து வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் மாவட்டம் தோறும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க திமுக தரப்பிலும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகள் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜூன் 28 2025 அன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வியூகங்கள், பணிகள், பின்தங்கிய தொகுதிகளில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், பூத் கமிட்டி ஏஜென்ட்கள் அமைப்பது உள்ளிட்டா பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது