குடையுடன் போங்க மக்களே..! சென்னை திருவள்ளூரில் கனமழை தொடரும் – வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்..
Chennai Rain: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 50 கிலோமீட்டர் தொலைவில் கடந்த 24 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டிருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மெல்ல மெல்ல வட திசையில் நகரும்போது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், டிசம்பர் 2, 2025: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய டிதவா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு அருகே கடந்த 24 மணி நேரமாக நிலை கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 18 மணி நேரத்திற்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான புயல் முதலில் இலங்கை கடற்பகுதியில் இருந்தது. தொடர்ந்து மெல்ல மெல்ல வடக்கு–வடமேற்கு திசையில் தள்ளிச் சென்றது. இது டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களை நோக்கிச் செல்லும் என குறிப்பிடப்பட்டது. முதலில் இது புயலாகவே தமிழகத்தை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட தமிழக கடலோர மாவட்டங்களை இந்த புயல் நெருங்கியபோது அது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
சென்னை விட்டு நகராத அழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
வடக்கடலோர தமிழக மாவட்டங்களை நெருங்கும் போது புயலால் அதிக மேகக் கூட்டங்களை தக்க வைத்துக்கொள்ள முடியாததால், எதிர்பார்த்த மழை அளவு பதிவாகவில்லை. அது வலுவிழந்ததால் மழை இருக்காது எனவும் நினைக்கப்பட்டது. ஆனால் வடக்கிலிருந்து மழைமேகங்கள் உருவாகத் தொடங்கியதால், டிசம்பர் 1, 2025 ஆம் தேதி நேற்று அதிகாலை முதல் விடிய விடிய மழை பதிவானது. இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் படிக்க: தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
இந்த சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 50 கிலோமீட்டர் தொலைவில் கடந்த 24 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டிருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மெல்ல மெல்ல வட திசையில் நகரும்போது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் – பிரதீப் ஜான்:
Weather Outlook for 02.12.2025 to 03.12.2025 – Good morning all
——————————————
Summary -The ex-Ditwah now as a Deep Depression is lying close to Chennai coast for last 24 hours and has brought extreme rains to parts of Chennai and Tiruvallur… pic.twitter.com/zYYKQzdvhz— Tamil Nadu Weatherman (@praddy06) December 2, 2025
இதைப் பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 24 மணி நேரமாக சென்னைக்கு அருகே இருப்பதனால் பல பகுதிகளில் அதிக கனமழை பதிவாகி வருவதாக தெரிவித்துள்ளார். அடுத்த 18 மணி நேரத்திற்கு சென்னை கடற்கரை ஓரமாக இந்த மண்டலம் நிலை கொள்ளும்.
மேலும் படிக்க: சென்னை விட்டு நகராத ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. நிலவரம் என்ன?
அதனைத் தொடர்ந்து இது தென் சென்னை – அதாவது கல்பாக்கம் பகுதியைத் தாண்டி – இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக்கூடும். இந்த மண்டலம் சென்னைக்கு அருகில் இருக்கும் வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து காலை முதல் இடைவிடாது மிதமான மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
சென்னை திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு:
மேகக் கூட்டங்கள் உள் மாவட்டங்களுக்கு நகரும் காரணத்தால் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழை பதிவாகக்கூடும். அதே சமயத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை முதல் இரவு முழுவதும் மிக கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.