Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கு வாய்ப்பா..? அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அப்டேட்!
Heatwave and Fisherman Warning: கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒருசில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 2ம், 3ம் தேதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சென்னை, ஜூன் 2: தமிழ்நாட்டில் (Tamil Nadu) கடந்த சில நாட்களுக்கு மேலாக ஆங்காங்கே மழை பெய்து வந்தநிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்த காரணத்தினால், வெயிலானது மீண்டும் மக்களை வாட்டி வதக்க தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (IMD – Chennai) தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான முன்னறிவிப்புகள், அடுத்த 7 நாட்கள் வானிலை (Weather Update) எப்படி உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.
அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம்:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuUdtd pic.twitter.com/AtL2Dd4Qoj
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 2, 2025
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஜூன் 2ம் தேதியான இன்றும், 2025 ஜூன் 3ம் தேதியான நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், 2025 ஜூன் 4ம் தேதி முதல் 2025 ஜூன் 8ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




வெப்பநிலை பற்றிய அப்டேட்:
2025 ஜூன் 2ம் தேதியான இன்று மற்றும் 2025 ஜூன் 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், 2025 ஜூன் 2ம் தேதியான இன்று மற்றும் 2025 ஜூன் 4ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் வானிலை எப்படி..?
2025 ஜூன் 2ம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 3ம் தேதியான நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
2025 ஜூன் 2ம் தேதியான இன்றும், 2025 ஜூன் 3ம் தேதியான நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், 2025 ஜூன் 4ம் தேதி முதல் 2025 ஜூன் 6ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. அதன்படி, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.