சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் இன்னும் ஒரிரு நாட்களில் கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, சென்னையிலும் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை, மே 1 : தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் (Tamil Nadu Heatwave Alert) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2025 பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, 2025 மார்ச் மாதத்தில் இருந்து வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தற்போதை வரை வெயில் கொளுத்தி எடுக்கிறது.
சுட்டெரிக்கும் வெயில்
இன்னும் மூன்று நாட்களில் கத்திரி வெயில் தொடங்குகிறது. இதனால், வரும் நாட்களில் வெயில் தாக்கம் மேலும் கடுமையாக இருக்கும். பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
2025 மே 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 30, 2025
சென்னையை பொறுத்தவரை, 2025 மே 1ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 மே 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 39 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.4 டிகிரி செல்சியஸ். மதுரை விமான நிலையத்தில் 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 37.7 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 37.2 டிகிரி செல்சியஸ், பரங்கிபேட்டை 37 டிகிரி செல்சியஸ், மதுரை நகரத்தில் 37.6 டிகிரி செல்சியஸ், கடலூரில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.7 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.