இனி மழை வெள்ளம் வந்தாலும் கவலை இல்லை.. சென்னைக்கு தனி பேரிடர் ஆணையம் அமைத்த அரசு..

Disaster Management: சென்னையில் மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், மக்களுக்கு போதிய உதவிகள் வழங்குவதில் சிக்கல்கள் உள்ளது. இதனை போக்கும் வகையில், சென்னைக்கு தனியாக பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி மழை வெள்ளம் வந்தாலும் கவலை இல்லை.. சென்னைக்கு தனி பேரிடர் ஆணையம் அமைத்த அரசு..

கோப்பு புகைப்படம்

Published: 

26 May 2025 11:57 AM

 IST

பேரிடர் மேலாண்மை ஆணையம்: சென்னையில் ஆண்டுதோறும் பருவ மழை காலத்தின் போது குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைநீர் வடிகள் பணிகள் பாதாள சாக்கடை பணிகள் சென்னை முழுவதும் மேற்கொள்ளப்பட்டாலும் கன மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுவது ஒரு வழக்கமாக இருக்கிறது. இதனால் ஆண்டு தோறும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் தற்போது தமிழக அரசு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது சென்னை மாநகராட்சிக்கு என தனியாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரிடர் காலங்கள்:

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வட சென்னை பகுதிகள், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, முடிச்சூர், வரதராஜபுரம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதுபோக சென்னையில் இருக்கக்கூடிய முக்கிய சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் ராட்சச மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீர் எடுப்பதும் அதனை உடனடியாக சரி செய்யும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபடுவதும் உண்டு. மழைக்காலங்களில் பேரிடர் மேலாண்மை துறை தரப்பில் பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தண்ணீர் தேங்கும் குடியிருப்பு பகுதிகளில் படகு சேவைகள், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆகியோர்களை நியமித்து அங்கிருக்க கூடிய மக்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னைக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம்:

ஆண்டுதோறும் இந்த பிரச்சனை இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னைக்கு என தனியாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர், சென்னை மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, நீர்வளத் துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் அடங்கிய ஆணையத்தை தமிழ்நாடு அரசு தற்போது உருவாக்க உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் சென்னைக்கு தக்க சமயத்தில் உதவி வழங்கிட இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் சிரமங்களை போக்கவும் இது உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பேரிடர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் இந்த ஆணையும் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை பொருத்தவரை தென்மேற்கு பருவமழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழை தான் அதிகப்படியான மழை கொடுக்கும். வடகிழக்கு பருவமழையின் போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக மாறி அது புதுச்சேரி அல்லது கடலூர் அல்லது தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் சமயத்தில் சென்னைக்கு அதிகப்படியான மழை அதாவது அதிக கன மழை ரெட் அலர்ட் போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுகிறது. இந்த சமயத்தில் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு அன்றாட தேவைகள் கூட கிடைப்பது சிக்கல் ஏற்படுகிறது. மழை அல்லது புயலின் போது தொலைதொடர்பு சேவைகள் முடங்குவதால் மக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று மக்களை மீட்பதும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சிக்கல்களை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தான் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் வரும் காலங்களில் இது போன்ற சிக்கல்களை சமாளிப்பதும் மக்களுக்கு போதிய உதவிகளை வழங்குவதும் இந்த ஆணையம் முக்கிய பணியாக மேற்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

 

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ