Bus Fare : தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது.. அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்!
Tamil Nadu Bus Fare Hike Denied | தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 03, 2025) அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரியலூர், ஜூன் 04 : தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் (Government Bus Fare) உயர்த்தப்படாது என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் (Tamil Nadu Transport Department Minister Sivasankar) தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேருந்து கட்டணம் உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பேருந்து கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அரசு பேருந்து கட்டணம் உயர்வு? – திட்டவட்டமாக மறுத்த அமைச்சர்
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று (ஜூன் 03, 2025) அரியலூரில் செய்தார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கருத்து கேட்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் கருத்து கேட்பு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். அப்போது பொதுமக்களுக்கு சுமை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கருத்து தான் வலியுறுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – எஸ்.எஸ்.சிவசங்கர்
அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட கூடாது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார். டீசல் விலை ஏற்றப்பட்ட நேரத்திலும் பேருந்து கட்டணம் உயரவில்லை. இப்போதும் உயர்த்த மாட்டோம் என்று தெளிவுபடுத்துகிறேன்.
– மாண்புமிகு அமைச்சர் திரு @sivasankar1ss அவர்கள்… pic.twitter.com/IfIhDNWiA3
— DMK IT WING (@DMKITwing) June 3, 2025
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் ஏற்கனவே இது போல பேருந்து கட்டணம் உயர்வு என்ற தகவல் பரவியது. அப்போது தமிழகத்தில் போக்குவரத்து துறை நெருக்கடி இருந்தாலும், பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையை பலமுறை உயர்த்தி இருந்தாலும் பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது என்று முதலமைச்சர் மிக தெளிவாக அறிவித்திருந்தார். மீண்டும் அதையே தான் சொல்கிறோம் தமிழகத்தில் பேருந்து கட்டணம் இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்ற அமைச்சரின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.