மீண்டும் முதுமலையில்… தாய் யானையுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சி தோல்வி…
Orphaned Elephant Calf: மதுக்கரை அருகே தாயை பிரிந்த ஒரு மாத குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். தாயுடன் சேர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு பராமரிப்பு வழங்கப்படுகிறது.

கோவையில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானை
கோவை மே 12: கோவை மாவட்டம் (Kovai) மதுக்கரை அருகே தாயை பிரிந்து தவித்த ஒரு மாத ஆண் குட்டி (Baby Elephant) யானையை வனத்துறையினர் மீட்டனர். தாயுடன் சேர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், யானைக் கூட்டமும் அதை ஏற்க மறுத்தது. இதையடுத்து, குட்டியை முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையுடன், தினமும் மூன்று முறை திரவ உணவுகள் அளித்து பராமரிக்கப்படுகிறது. தற்போது குட்டி யானை நல்ல உடல்நிலையில் உள்ளது. இந்த முகாமில் பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
தாயை பிரிந்து தவித்த குட்டி யானை
மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த ஒரு மாத வயதுடைய ஆண் குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக வன அதிகாரிகள், அந்த குட்டியை மீண்டும் தாய் யானையுடன் சேர்க்க பலமுறை முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் திட்டமும் தோல்வியடைந்தது. சக யானைகள் குட்டியை ஏற்க மறுத்ததால், வனத்துறையினர் மேல் அதிகாரிகளின் உத்தரவுப்படி அந்த குட்டியை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவ பரிசோதனையும், சிறப்பு பராமரிப்பும்
முதுமலை முகாமில், கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் குட்டி யானைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தற்சமயம், அந்த யானை தனி அறையில் வைத்து தினமும் மூன்று முறை திரவ உணவுகள் அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த யானைக்கு இருவரை நியமித்து தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. வனத்துறையினர் தெரிவித்ததன்படி, குட்டி யானை தற்போது நல்ல உடல் நலத்தில் உள்ளது.
வளர்ப்பு முகாமில் யானைகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
தெப்பக்காடு யானைகள் முகாம் (Theppakadu Elephant Camp) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த முகாம் 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இந்தியாவில் இயங்கும் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாகும் .
தற்போது தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. வெயில் காரணமாக வனப்பகுதிகளில் தண்ணீர் கிடைப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் வனத்துறையினர் பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
இதனிடையே, யானைகள் ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நிகழ்வுகளை தவிர்க்கவும், தாயை இழந்த குட்டிகளை பாதுகாப்பதும் முதுமலை முகாமின் முக்கிய பணி என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த குட்டி யானையின் பராமரிப்பில் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும், தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.