TVK Vijay: நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதிகள்.. திரும்ப பெற வேண்டும் என தவெக தலைவர் வலியுறுத்தல்!
RBI's New Gold Loan Guidelines: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய தங்கக் கடன் வழிகாட்டுதல்கள் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவலை தெரிவித்துள்ளார். நகைக்கடன் பெறுவதற்கான புதிய விதிகள், ஆவணச் சான்றுகள், கடன் தொகை குறைப்பு போன்றவை கடன் பெறுவதை கடினமாக்குகின்றன. இதனால், தனியார் நிதி நிறுவனங்களை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டு, மக்கள் அதிக வட்டிக்கு ஆளாக நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் - தங்க நகை கடன்Image Source: PTI and Twitter
சென்னை, மே 24: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க கடன்களை வழங்குவதற்கான நடைமுறைகளை கோடிட்டு காட்டும் வரைவு வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) வெளியிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் NBFCs-களிடமிருந்து தங்கக் கடன்களைப் பெறுவதற்கு சீரான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிறுவ இந்த வரைவு வழிகாட்டுதல்கள் முயல்கின்றன. இந்தநிலையில் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆபத்து காலத்தில் உதவியாக விளங்கும் நகைக்கடன் (Gold Loan) பெறும் வழிமுறைகளை திருத்தி, புதியதாக 9 விதிமுறைகளை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Vijay) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வெளியிட்ட அறிக்கையின் முக்கிய கருத்துகள்:
— TVK Vijay (@TVKVijayHQ) May 24, 2025
- இந்திய மக்கள் தங்களது தங்கத்தை ஒரு சொத்தின் அடையாளமாக நினைக்கிறார்கள். தங்கம் என்பது திருமணம் போன்ற முக்கிய விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஆபரணமாக அணியப்படுகிறது. மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள் வீடு, வாகனம், நிலம் போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவதற்கும், கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் வங்கிகளில் அடமானம் வைத்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்.
- இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகளின்படி, தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதற்கான உரிமையாளர்கள் தாங்கள்தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள், அதற்குப் பதிலாக வேறு ஆவணங்களையோ, உறுதிமொழிச் சான்றையோ அளித்துக் கடன் பெறலாம் என்றும்,அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக் கூடாது என்றும் சொல்லியிருப்பதால். நகைக்கடன் மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
- இந்தியாவில் பல குடும்பங்களில் இன்றும் பாட்டியின் நகைகளே தாய்க்கும் அவரது மகளுக்கும் மருமகளுக்கும் கொடுக்கப்பட்டு வரும் நடைமுறையாக பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், அவற்றிற்கான ரசீதையோ, ஆவணத்தையோ அவர்களுக்கு எங்கு கிடைக்கும்..?
- தங்கத்தின் விலை ஒரு பக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் தொகையோ குறைந்துகொண்டே போனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதை ரிசர்வ் பேங்க் அறியாதா..?
- ரிசர்வ் வங்கி தற்போது கடன் தொகை வழங்கும் அளவை, தங்கத்தின் மொத்த மதிப்பில் இருந்து 75 சதவிகிதமாக குறைத்துள்ளது. இவ்வாறு கடன் தொகையையும் குறைத்தால், பணம் அதிகம் தேவைப்படுவோர் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களையும், கந்து வட்டிக் கும்பலையுமே நாடிச் சென்று தங்க நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், மீளாத் துயருக்கு ஆளாக நேரிடும்.
- வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் என்பது போன்ற புதிய விதி. மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும். இந்தப் புதிய விதியால், வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகலாம்.
- நகைக்கடன் பெற்றவர்கள் அதற்கு வட்டித் தொகை மட்டுமே செலுத்தி அதை அப்படியே புதுப்பித்துக் கொள்ள முடியாது என்றும், அடகு வைத்த நகையை முழுவதுமாக மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் அடகு வைத்துக் கடன் பெற முடியும் என்ற புதிய நிபந்தனையால் மக்கள் இன்னும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாவர்கள்.
- அதன்படி, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்
என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.