எம்.எல்.ஏ அருளுக்கு மாநில பதவி கொடுத்த ராமதாஸ்.. கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய அன்புமணி..
PMK Internal Issue: பாமகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. சேலம் மாநகர சட்டமன்ற உறுப்பினர் அருளை இணை பொதுச் செயலாளராக கட்சி நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அவரை அன்புமணி ராமதாஸ் நீக்கியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
பாமகவில் தினந்தோறும் புதிய சவால்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து எம்எல்ஏ அருளை நீக்கி அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஜூன் 25 2025 தேதியான நேற்று எம் எல் ஏ அருளுக்கு பாமகவின் இணை பொதுச் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்து கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு முதல் பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. ஆனால் அது வெளியே வராமல் இருந்தது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தரும் பொழுது அன்புமணி ராமதாசை தலைவர் பதவியில் இருந்து நீக்கி கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
வெளியான தந்தை மகன் மோதல்:
கட்சி நிறுவனர் ராமதாஸை பொறுத்த வரையில் கூட்டணி என்றால் அது அதிமுக அல்லது திமுகவுடன் தான். ஆனால் கடந்த முறை கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் ராமதாஸிற்கு உடன்பாடு இல்லை என கருத்துக்கள் வெளியானது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தரும் பொழுது அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி விடுவார் என்பதற்காக அவசர அவசரமாக அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடி முறையாக தலைவர் பதவிக்கு வந்தவன் நான் என்னை யாராலும் நீக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்தார். அப்போது முதல் தந்தை மகனுக்கு இடையே இருக்கக்கூடிய மோதல் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது.
தனித்தனியாக செயல்படும் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ்:
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கின்றார்கள். ராமதாசை பொருத்தவரையில் தைலாபுரத்தில் அவருடைய ஆதரவாளர்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதில் அன்புமணி ராமதாஸோ அல்லது அவரது ஆதரவாளர்களோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்து சில தினங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களான 41 பேரை பொறுப்பில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க அன்புமணி ராமதாஸ் மாவட்டம் தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் அவருக்கு திரளான ஆதரவு கிடைத்தது. கடைசியாக சேலம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். ஆனால் அப்போது சேலம் மாநகர சட்டமன்ற உறுப்பினரான அருள் அதில் பங்கேற்கவில்லை. அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கக்கூடிய ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ராமதாஸ் ஆதரவாளராக எம்.எல்.ஏ அருள்:
அவர் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து வந்ததும் அன்புமணி ராமதாஸ் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளாமல் இருந்ததும், அவர் ராமதாஸின் ஆதரவாளராக செயல்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. இதன் காரணமாக ஜூன் 25, 2025, இதன் காரணமாக கட்சி நிறுவனர் ராமதாஸ் அவருக்கு மாநில பொறுப்பை வழங்கினார். ஆனால் அன்புமணி ராமதாஸ் அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில பொறுப்பில் இருக்கும் அவருக்கு மாவட்ட பொறுப்பு தேவையில்லை என குறிப்பிட்டிருந்தார்.
எம்.எல்.ஏ அருள் கொடுத்த விளக்கம்:
இதற்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் அருள் பாமகவின் இணைப்பு பொதுச்செயலாளராக கட்சி நிறுவனர் என்னை நியமனம் செய்துள்ளார். மாநில பொறுப்பு வழங்கியுள்ள நிலையில் என்னை மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டிருந்தார். சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகனுக்கு இடையே இருக்கக்கூடிய மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக பாமக கட்சியில் இரண்டு பேர் தனித்தனியே வழிநடத்தி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாமக கட்சி இரண்டாகப் பிரிந்து சந்திக்கும் என யூகங்கள் தெரிவிக்கின்றன.