பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே மணி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..
PMK G.K. Mani Hospitalized: பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே மணி நெஞ்சு வலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக சென்னையில் இருக்கும் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜி.கே மணி
சென்னை, ஆகஸ்ட் 23, 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவரும் சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நெஞ்சுவலி மற்றும் முதுகுத்தண்டு வலி காரணமாக வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் இருவரும் கட்சியின் செயல்பாடுகளை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர். அன்புமணி தரப்பில், ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கி, புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல், ராமதாஸ் தரப்பிலும் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தனித்தனியாக நடந்த பொதுக்குழு கூட்டம்:
அந்த வகையில், சமீபத்தில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை நடத்தினர். அப்போது, அன்புமணி தரப்பில் நடைபெற்ற பொதுக்குழுவில், அவரது தலைவர் பதவிக்காலம் போரோடு காலத்திற்கு நீடிக்கப்பட்டது. அதேபோல், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில், கட்சியின் தலைவராக ராமதாஸ் நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க: தென்மாவட்டம் குறி.. 4ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்.. திட்டம் என்ன?
இப்படியான சூழலில், ஆகஸ்ட் 22, 2025 அன்று, கட்சி நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு நிர்வாகக் குழுவில் உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஸ்ரீகாந்தியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி ராமதாஸ் எதிராக ஒழுங்கு நடவடிக்கை – ஜி.கே மணி:
அதேபோல், அந்த பொதுக்குழுவில், அன்புமணி, ராமதாஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்திருந்தார். அதாவது, கட்சி நிறுவனர் ராமதாஸை அவமானப்படுத்தும் செயல்களைச் செய்வது, தனியாக பொதுக்குழுவை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: மீண்டும் அதிர்ச்சி.. நெல்லையில் சிறுமியின் முகத்தை கடித்து குதறிய தெருநாய்!
ஜி.கே மணி மருத்துவமணையில் அனுமதி:
இந்த நிலையில், ஆகஸ்ட் 22, 2025 அன்று, ஜி.கே மணி துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, 2025 ஜூன் மாதத்திலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, கட்சி நிறுவனர் ராமதாஸ் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.