கரூர், பிப்ரவரி 26, 2026: வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கூட்டத்தில் பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மீது கொடிக்கம்பம் விழுந்து காயம் ஏற்பட்டது. கரூர் 80 அடி சாலை அருகே, தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், நாஞ்சில் சம்பத் மற்றும் ஜெகதீஷ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தவெக நிர்வாகி மீது கொடி கம்பம் சாய்ந்து விபத்து:
நாஞ்சில் சம்பத் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியது. அதனை பொருட்படுத்தாத தொண்டர்கள், நாற்காலிகளை தங்களது தலையில் கவிழ்த்தபடி சம்பத்தின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கூட்ட மேடை அருகே இருந்த மின்விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக சரிந்து, மேடையில் நின்றுகொண்டிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் தலையில் விழுந்தது.
இதனால் காயமடைந்த ஜெகதீஷ் பாண்டியனை மீட்ட நிர்வாகிகள், அவரை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் நிகழ்ந்ததை கண்டுகொள்ளாமல் நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பேசியது, அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
