சிசிடிவியில் தெரிந்த வாக்குவாதம்.. அடுத்தநாள் இருவர் சடலம்.. ஜெய்ப்பூரில் ஷாக் சம்பவம்!
Jaipur Couple's Mysterious Death | ஜெய்ப்பூரில் தம்பதி இருவர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முந்தைய நாள் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குடியிருப்பின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தம்பதி தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெய்ப்பூர், ஜூன் 30 : ஜெய்ப்பூரில் (Jaipur) கணவன், மனைவி வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு முந்தைய நாள் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அடுத்த நாள் காலை வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதனை தற்கொலை வழக்காக விசாரிக்கும் நிலையில், தம்பதி கொலை செய்யப்பட்டதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், முந்தைய நாள் மாலை வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜெய்ப்பூர் தம்பதி வீட்டில் சடலமாக மீட்பு
ஜெய்ப்பூரை சேர்ந்தவர்கள் தர்மேந்திரா, சுமன் தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 11 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். தர்மேந்திரா வங்கியில் பணியாற்றி வரும் நிலையில், சுமன் வீட்டை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், நீண்ட நேரம் அழைத்தும் தர்மேந்திரா அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது நண்பர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தர்மேந்திரா மற்றும் அவரது மனைவி, வீட்டில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி
தம்பதியின் மரணம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார், அந்த குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது சம்பவத்திற்கு முந்தைய நாள் மாலை தர்மேந்திரா, சுமன் தம்பதி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதற்கு பிறகு தான் தம்பதி உயிரிழந்துள்ளனர். தர்மேந்திராவின் உடலில் காயங்கள் இருந்ததால் கொலைக்கான வாய்ப்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




அந்த தம்பதி சமீபத்தில் தான் வீடு வாங்கியதாகவும், அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இந்த வழக்கு குறித்து விளக்கம் அளித்துள்ள போலீசார், இது தற்கொலையாக இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். வீட்டை உடைத்து யாரும் உள்ளே செல்லவில்லை என்றும் நகை, பணம் என எதுவும் திருடு போகவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தம்பதியின் ஸ்மார்ட்போன்கள் ஃபாரன்சிக் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் ஏதேனும் துப்பு துலங்குகிறதா என பார்க்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.