Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மார்க்சிஸ்ட் – இந்து முன்னணியர் மோதல்.. நடுரோட்டில் களேபரம்.. பலர் காயம்!

CPM - Hindu Munnani cadres clash In Dindigul : திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரைக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் – இந்து முன்னணியர் மோதல்.. நடுரோட்டில் களேபரம்.. பலர் காயம்!
சிபிஎம் - இந்து முன்னணியினர் மோதல்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Jun 2025 18:41 PM

சென்னை, ஜூன் 20 :  திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் (CPM) கட்சியினருக்கும், இந்து முன்னணியினருக்கும் (Hindu Munnani) இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. நடுரோட்டில் இருகட்சி நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில்  மார்க்சிஸ்ட்   கட்சியினர் சார்பில் திண்ணை பிரச்சாரம் 2025 ஜூன் 20ஆம் தேதியான இன்று மதியம் நடந்தது. இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர்  கலந்து கொண்டனர். அங்கு இந்து முன்னணி கட்சியினர் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, முருகன் மாநாடு குறித்தும், இந்து முன்னணி அமைப்பு தலைவர்கள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருகட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. ஒருவரைக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மார்க்சிஸ்ட் – இந்து முன்னணியர் மோதல்

இதனால், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒருவரைக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுத்து நிறுத்தினர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் பாஜக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த மோதல் தொடர்பாக இருகட்சியினரும் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.  இந்த மோதல் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.

திண்டுக்கல்லில் பரபரப்பு

இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்டோர் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்து முன்னணி அமைப்பினரையும், முருகன் மாநாடு குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சியினர்  விமர்சித்ததால், மோதல் வெடித்ததாக தெரியவந்துள்ளது. இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை கிளப்பியது.

ஜூன் 22ஆம் தேதி மதுரையில் முருகன் மாநாடு

மதுரையில் 2025 ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்து முன்னணி அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அங்கு அறுபடை கோயில்களில் சிறப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்படும். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.