அமெரிக்கா செல்ல டிரம்பின் அழைப்பை ஏற்காதது ஏன்? பிரதமர் மோடி கொடுத்த விளக்கம்!
PM Modi on Donald Trump Invite to Visit US : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அழைப்பை ஏற்காதது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை பிரதமர் மோடி நிராகரித்திருந்தார்.

டெல்லி, ஜூன் 20 : அமெரிக்காவுக்கு வரும்படி அதிபர் டொனால்டு டிரம்பின் (US President Donald Trump) அழைப்பை ஏற்காதது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி (PM Modi) விளக்கம் அளித்துள்ளார். மகாபிரபுவின் தேசத்திற்கு (ஒடிசாவை குறிப்பிட்டார்) செல்வ வேண்டும் என்பதால், அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை மறுத்ததாக பிரதமர் மோடி கூறினார். ஒடிசாவில் பிரதமர் மோடி 2025 ஜூன 20ஆம் தேதியான இன்று பயணம் மேற்கொண்டார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து, ரூ.18,600 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார். மேலும், கட்சி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
டிரம்பின் அழைப்பை ஏற்காதது ஏன்?
அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை அமெரிக்காவுக்கு அழைத்தது குறித்தும், அதனை நிராகரித்தது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, ” இரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் G7 உச்சிமாநாட்டிற்காக கனடாவில் இருந்தேன்.




அப்போது, என்னை அமெரிக்காவுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைத்தார். கனடா வந்திருப்பதால், அமெரிக்கா வழியாக செல்லுங்கள் நாம் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டுவிட்டு பேசுவார் என கூறினார். மிகுந்த வற்புறுத்தலுடன் அமெரிக்கா வர எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நான் அந்த அழைப்பை ஏற்கவில்லை.
நான் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் நன்றி கூறினேன். மகாபிரபுவின் தேசத்திற்குச் (ஒடிசாவை குறிப்பிட்டார்) செல்வது எனக்கு மிகவும் முக்கியம். எனவே நான் அவரது அழைப்பை பணிவுடன் நிராகரித்தேன். மகாபிரபு மீதான உங்கள் அன்பும் பக்தியும் என்னை இந்த மண்ணுக்குக் கொண்டு வந்தன.
பிரதமர் மோடி விளக்கம்
#WATCH | Bhubaneswar, Odisha: “Just two days ago, I was in Canada for the G7 summit and the US President Trump called me. He said, since you have come to Canada, go via Washington, we will have dinner together and talk. He extended the invitation with great insistence. I told the… pic.twitter.com/MdLsiYnNCQ
— ANI (@ANI) June 20, 2025
3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி
அண்மையில் பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2025 ஜூன் 15ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, 2025 ஜூன் 19ஆம் தேதி டெல்லி திரும்பினார். குரோஷியா, சைப்ரஸ், கனடா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டார்.
இதில் முக்கியமானதாக பிரதமர் மோடியின் கனடா பயணம் அமைந்தது. கனடாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, கனடா வந்த அதிபர் டிரம்ப், அவசரமாக அங்கு இருந்து சென்றதாக தெரிகிறது.
அதன்பிறகு, பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 35 நிமிடங்கள் பேசினார். அப்போது, பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வர அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்கவில்லை. இந்த விஷயம் பேசும் பொருளாக மாறியதை அடுத்து, பிரதமர் மோடி இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.