Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடாது.. மீறினால்.. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..

High Court: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எக்காரணத்தை கொண்டும் எந்த வடிவிலும் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மீறினால் காவல் துறையே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடாது.. மீறினால்.. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jun 2025 18:21 PM

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. எக்காரணத்தை கொண்டும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாது என காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மீறினால் அதற்கு காவல் துறையினரே பொறுப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி என்ன?

பாலியல் வன்கொடுமை தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை புலன் விசாரணை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

அடையாளத்தை வெளியிடக்கூடாது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் எனவும், இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு, டிஜிபி-யும், சென்னை மாநகர காவல் ஆணையரும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மீறினால் ஒட்டுமொத்த காவல் துறையினரும் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கும்படி, கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.