Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக கூட்டணி உடையும் என்ற பகல் கனவு நினைவாகாது – காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை..

Congress Leader Selvaperunthagai: திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் அதனால் ஆதாயம் கிடைக்கும் என அதிமுக மற்றும் பாஜக பகல் கனவு காண்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதாக தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி உடையும் என்ற பகல் கனவு நினைவாகாது – காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை..
செல்வப்பெருந்தகை
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Jun 2025 08:53 AM

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திமுக கூட்டணி உடையும் என காணும் கனவு ஒருபோதும் பலிக்காது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஆனது நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என முனைப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் விரிசல்?

குறிப்பாக அதிமுக தரப்பில் விசிக தலைவருக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை தலைவர் திருமாவளவனை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது பெரும் புயலை கிளப்பியது. திமுக கூட்டணியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என பல்வேறு கருத்துக்கள் வெளியானது.

இது தொடர்பாக பேசிய வைகைச் செல்வன், “திருச்சியில் வைகைச்செல்வன் மற்றும் திருமாவளவன் சந்திப்பில் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. இது தான் தற்போதைக்கு சொல்லமுடியும்” என தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக விளக்கம் அளித்த திருமாவளவன் இந்த சந்திப்பின்போது அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என குறிப்பிட்டு இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதிமுக பாஜக காணும் பகல் கனவு – செல்வப்பெருந்தகை:

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அதிமுக பாஜகவும் காணும் பகல் கனவு ஒருபோதும் நினைவாகாது என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ எங்கள் கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும், சிதறும், அதனால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என அதிமுகவும் பாஜகவும் பகல் கனவு காண்கிறார்கள்.

எங்கள் கூட்டணியில் எந்த வித குழப்பமும் இல்லை. சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழகத்தில் யாரெல்லாம் பாசிச சக்திகளோடு இயங்குகிறார்களோ அவர்களை தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். அயோத்தியில் ராமரை வைத்து பாஜக ஆதாயம் தேடினார்கள். ஆனால் ராமர் பாஜகவை கைவிட்டது. பாஜக கட்சி மக்களை நம்பி அரசியல் செய்யவில்லை மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்