Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை பிடிப்பட்டது.. அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க முடிவு..

Valparai Leopard Attack: கோவை மாவட்டம் வால்பாறையில், ஜூன் 20, 2025 அன்று 6 வயது சிறுமியை கவ்விச்சென்று, சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜூன் 26, 2025 அன்று காலை 6 மணிக்கு கூண்டில் பிடிப்பட்டது.

சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை பிடிப்பட்டது.. அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க முடிவு..
பிடிப்பட்ட சிறுத்தை
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Jun 2025 12:20 PM

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். வால்பாறை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பச்சைமலை எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகின்றனர். அதில் மனோஜ் முண்டா மற்றும் மோனிகா குமாரி தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் 2025 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி அன்று தாய் மோனிகாவுடன் 6 வயது சிறுமி ரோஷினி வீட்டுப் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்த தாய் குடத்தை வீட்டிற்குள் வைப்பதற்காக வந்து திரும்பிய போது சிறுமியை காணவில்லை. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்த போது, அந்த சிறுமியை அப்பகுதியில் இருந்த சிறுத்தை கவ்விச் சென்றதாக தெரியவந்தது.

சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை:

உடனடியாக இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் மற்றும் காவல்துறை இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். 2025 ஜூன் 20 அன்று இரவு முழுவதும் தேடுதல் பணி நீடித்தது. ட்ரோன் மூலமாகவும், மோப்ப நாய்கள் மூலமாகவும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மழையின் காரணமாக தேடுதல் பணியில் சுணக்கம் ஏற்பட்டது

வீட்டின் அருகில் இருக்கக்கூடிய மரக்கிளைகள், தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அந்த சிறுமி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அடுத்த நாளான 2025 ஜூன் 21ஆம் தேதி காலையில் சிறுமியின் உடல் வீட்டிலிருந்து 700 மீட்டர் தொலைவில் கிடைக்கப்பெற்றது. சிறுத்தை கவ்விச்சென்ற 6 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுத்தை பிடிக்க நடவடிக்கை:

இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும் சிறுத்தை பிடிக்கவும் வனத்துறையினர் சார்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. அதேபோல் சிறுத்தை நடமாடும் இடங்களில் நோட்டம் வைத்து கூண்டுகள் அமைக்கப்பட்டது.

கூண்டில் சிக்கிய சிறுத்தை:


தொடர்ந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை இன்று காலை அதாவது ஜூன் 26 2025 அன்று பிடிபட்டது. இதனைத் தொடர்ந்து சிறுத்தையை கூண்டுடன் வேறு இடத்திற்கு மாற்றம் செய்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் சிறுத்தையை விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். பல நாட்களாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை தற்போது பிடிபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.