Coimbatore Elephant Death: வயிறு நிறைய குப்பை கழிவுகள்.. யானையின் உடற்கூராய்வில் கிடைத்த பகீர் தகவல்.. குப்பை கொட்ட தடை விதிப்பு!
Plastic Waste: கோயம்புத்தூர் மருதமலை அருகே பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் தாய் யானையும் அதன் குட்டியும் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் விரட்ட முயன்றனர். தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கும்கி யானையின் உதவியுடன் காட்டிற்குள் விரட்டப்பட்டன. நான்கு நாட்கள் சிகிச்சை அளித்தும் யானை உயிரிழந்தது. உடற்கூராய்வில் அதன் வயிற்றில் 12 மாத ஆண்குட்டி மற்றும் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் கண்டறியப்பட்டது.

கோவை, மே 21: கோயம்புத்தூர் (Coimbatore) அடுத்த மருதமலை அடிவாரத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் (Bharathiar University) மேற்குப்பகுதியில் கடந்த 2025 மே 17ம் தேதி அன்று குட்டி யானையுடன், தாய் யானை நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது, பாதையில் நின்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தாய் யானை மற்றும் குட்டி யானையை விரட்ட எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், இரண்டு யானைகளும் நகர்ந்ததாக தெரியவில்லை. இதையடுத்து, உடனடியாக கோவை வனத்துறையினருக்கு (Forest Officer) வாகன ஓட்டிகள் தகவல்கள் கொடுக்க, விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை நீண்ட நேரம் கண்காணித்தனர். அந்த நேரத்தில், தாய் யானைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருந்ததை வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முன்வந்தனர்.
தாய் யானைக்கு அருகில் தவித்த குட்டி யானை:
தாய் யானைக்கு உடல்நல பிரச்சனை உள்ள காரணத்தினால், யாரும் அதனை தாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில், குட்டி யானை யாரையும் தாய் யானைக்கு அருகில் வரவிடாமல் தடுத்து, தவிப்புடன் நின்று கொண்டிருந்தது. இதன் காரணமாக, தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்கள் தவித்தனர். இதனால், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, வனத்துறையினர் ஒரியன் என்ற கும்கி யானையை அழைத்துவந்து பாதையில் வழிமறித்து நின்று கொண்டிருந்த தாய் மற்றும் குட்டி யானையை காட்டிற்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குட்டி யானையை தனிமைப்படுத்தி, தாய் யானைக்கு சிகிச்சையளிக்க தொடங்கினர்.
இந்தநிலையில், தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக, உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக கிரேன் உதவியுடன் மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது. தொடர்ந்து, கும்கி யானை உதவியுடன் தாய் யானையை தூக்கி பிடிக்கவும், அந்த யானைக்கு தேவையான மருந்து, உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்கியும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து, நேற்று அதாவது 2025 மே 20ம் தேதி குழி தோண்டி செயற்கை தண்ணீர் தொட்டி கட்டி, தாய் யானைக்கு ’ஹைட்ரோதெரபி’ சிகிச்சையை அளித்தனர். இந்தநிலையில், நேற்று அதாவது 2025 மே 21ம் தேதியான இன்று யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யானையை உடற்கூராய்வு மேற்கொண்டபோது அதன் வயிற்றில் இருந்த 12 மாத ஆண்குட்டியும், அதிகளவிலான பிளாஸ்டிக்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டுதான் தாய் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் மருதமலை வனப்பகுதியை ஒட்டிய சோமையாம்பாளையம் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றப்பட்டது. மேலும், இந்த பகுதி முழுவதும் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.