நாமக்கல், ஏப்ரல் 16, 2026: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார். மேலும், தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து, அவரது தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்கான தொகுதி மறுவரையறை, மக்களவைத் தொகுதிகளை 850 ஆக அதிகரிப்பது உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளன.
தொகுதி மறிவரையறை மசோதா:
இதற்காக அரசியலமைப்பு சட்டம் 131வது திருத்த மசோதா 2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.
மேலும் படிக்க: “அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..
இந்த தொகுதி மறுவரையறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மு. க. ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக தனது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
நேற்றைய தினம் வெளியிட்ட வீடியோவில், “நாளை அனைவரும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும்” என மக்களிடம் கோரிக்கை விடுத்த அவர், ஏப்ரல் 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின்:
அதனைத் தொடர்ந்து, இன்று மு. க. ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து கருப்புக்கொடி ஏற்றி, தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாடு எங்கும் எதிர்ப்பு தீ பரவட்டும்; பாஜகவின் ஆணவம் அடங்கட்டும். அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்பு டெல்லியையே சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பு எங்கள் தீ தணிந்தது. இன்று தமிழரை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கும் இந்த கருப்பு சட்டத்தின் நகலை எரித்து, மேலும் ஒரு தீயை பற்றவைத்துள்ளேன். இது திராவிட நாடெங்கும் பரவி, பாஜகவின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்” என தெரிவித்துள்ளார்.