தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு.. ஆட்டோக்கள் இயங்குவதில் சிக்கல்.. நிலமை என்ன?
LPG Shortage: எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்கள் இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சில பெட்ரோல் பங்குகளில் எல்பிஜி கிடைத்தாலும் அதை நிரப்புவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 10, 2026: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரான் ஹார்மோஸ் நீரிணையை மூடியுள்ளது. உலகின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்த ஹார்மோஸ் நீரிணை வழியாகத்தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சூழலில் ஹார்மோஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அதன் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
எரிவாயு தட்டுப்பாடு:
இந்த சூழலில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி
தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சில உணவகங்களில் உணவு தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சில உணவகங்களில் இட்லி, சாம்பார் சாதம், கலவை சாதம் போன்ற சில உணவுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. மற்றபடி தோசை, சப்பாத்தி, ஆம்லெட் போன்ற உணவுகள் தயாரிக்கப்படாது என பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஆட்டோக்கள் இயங்குவதில் சிக்கல்?
இது ஒரு பக்கம் இருக்க, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்கள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் பெரும்பாலான ஆட்டோக்கள் CNG (எரிவாயு) மூலமாகத்தான் இயக்கப்படுகின்றன. எரிவாயு ஒரு சில பெட்ரோல் பங்குகளில் மட்டுமே கிடைக்கிறது.
பல மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள வடபழனியில் இயங்கி வரும் எல்பிஜி நிரப்பும் மையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு வணிக ரீதியான எல்பிஜி நிரப்பும் மையங்களிலும் போதிய ஸ்டாக் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை:
எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்கள் இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சில பெட்ரோல் பங்குகளில் எல்பிஜி கிடைத்தாலும் அதை நிரப்புவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் எரிவாயு இல்லாமல் ஆட்டோக்களை இயக்குவதில் மேலும் சிக்கல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே பல ஆட்டோ ஓட்டுநர்கள் எங்கு எரிவாயு கிடைக்கிறதோ அந்த பெட்ரோல் பங்குகளுக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து எல்பிஜி நிரப்பி வருகின்றனர்.