இடைவிடாமல் பெய்யும் மழை.. 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அதாவது டிசம்பர் 2 2025 தேதி ஆன நாளை சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்த உத்தரவிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
டிசம்பர் 1, 2025: சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அதாவது டிசம்பர் 2 2025 தேதி ஆன நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்த உத்தரவிட்டுள்ளார்.
வலுவிழக்கும் புயல்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் – வடதமிழகம் – புதுவை – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு – தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.
மேலும் படிக்க: டிட்வா புயல் பாதிப்பு.. உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..
இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் – புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.
சென்னையில் இடைவிடாது பெய்யும் மழை:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. நேற்று புறநகர் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், மிதமான மழை மட்டுமே பதிவானது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைச் சூழ்ந்து மழை மேகங்கள் உருவானதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பதிவாகி வருகிறது. காலை தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.
இந்த சூழலில், இன்று அதாவது டிசம்பர் 1, 2025 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் மழையில் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.
மழைநீரில் தத்தளிக்கும் தலைநகர் சென்னை:
தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், சமூக வலைதளங்களில், தொடர்ச்சியான மழை இருந்தாலும் பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மாணவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் பள்ளிக்குச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்த சூழலில், வானிலை ஆய்வு மையம் நாளையும், அதாவது டிசம்பர் 2தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவித்துள்ளது.
4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
மேலும், மாலை முதல் இரவு வரை இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.