நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல் போட்டி.. நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ இயக்கம் என அறிவிப்பு..
ரசிகர்களுக்காக ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணங்களும், கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள், டிஜிட்டல் அல்லது அச்சு வடிவில் உள்ள QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 10, 2026: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, ரசிகர்கள் இடையூறு இன்றி போட்டியை பார்த்து ரசிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் வழித்தட மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே அரசினர் தோட்டம் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் தரப்பில் சிறப்பு ஏற்பாடு:
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்கவும், Chennai Metro Rail Limited நிறுவனம் CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து “IPL 2026” லீக் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக பிரத்யேக மெட்ரோ சேவைகளை வழங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் IPL 2026 லீக் போட்டி எண் 18, ஏப்ரல் 11, 2026 அன்று நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: ஒருபக்கம் மழை… மறுபக்கம் கொதிக்கும் வெப்பம்.. எங்கெங்கு தெரியுமா?
கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள்:
இந்த போட்டியை முன்னிட்டு, ரசிகர்களுக்காக ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணங்களும், கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள், டிஜிட்டல் அல்லது அச்சு வடிவில் உள்ள QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
இந்த சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்த முடியும். சென்னை முழுவதும் செயல்பாட்டில் உள்ள எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும், போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் வரை கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
மேலும் படிக்க: லாரி வடிவில் வந்த எமன்.. மகளை பறிகொடுத்து நடுரோட்டில் கதறிய தந்தை.. குமரியில் மனதை ரணமாக்கும் சம்பவம்!
நள்ளிரவு ஒரு மணி வரை ரயில் சேவை:
மேலும், ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் போட்டியை முன்னிட்டு, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1:00 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. IPL 2026 போட்டியை காணச் செல்லும் ரசிகர்கள், மேற்கண்ட வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.