Lionel Messi to Visit India: இந்தியா வருகிறாரா லியோனல் மெஸ்ஸி..? போஸ்ட் மூலம் ட்விஸ்ட் கொடுத்த கேரள அமைச்சர்!
Lionel Messi India Tour 2025 Confirmed: கேரள விளையாட்டு அமைச்சர் அப்துர் ரஹ்மான், அர்ஜெண்டினா அணியின் 2025 அக்டோபர்-நவம்பர் இந்திய சுற்றுப்பயணம் உறுதி என அறிவித்துள்ளார். ஸ்பான்சர் நிறுவனத்தின் நிதி ஒப்புதலுடன், மெஸ்ஸியுடன் அர்ஜெண்டினா அணி திருவனந்தபுரத்தில் நட்புப் போட்டியில் பங்கேற்கும். கேரள அரசு அனைத்து வசதிகளையும் வழங்கும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு மகத்தான செய்தியாகும்.

லியோனல் மெஸ்ஸி
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவிற்கு உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணியுடன் வரப்போகிறார் என்ற செய்தியை நீண்ட காலமாக கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால், எப்போது வருகிறார்..? உண்மையிலேயே வருகிறாரா என்ற கேள்விகள் எல்லாம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வியாக முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில், மெஸ்ஸி இந்தியா வரும் பயணம் ரத்தானதாக கூறப்பட்டது. இந்தநிலையில், அர்ஜெண்டினா கால்பந்து அணி (Argentina National Football Team) தனது கேரள சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததாக வெளியான செய்திகளை கேரள விளையாட்டு அமைச்சர் வி. அப்துர் ரஹ்மான் (Kerala Sports Minister Abdurahiman) மறுத்துள்ளார்.
இந்தியா வருகிறாரா மெஸ்ஸி..?
இதுகுறித்து கேரள விளையாட்டு அமைச்சர் வி. அப்துர் ரஹ்மான் தெரிவித்ததாவது, “அர்ஜெண்டினா அணி வருகின்ற 2025 ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் வர வாய்ப்புள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, அரசு விருந்தினருக்குரிய வசதிகளை அர்ஜெண்டினா அணி பெறும். அர்ஜெண்டினா அணியின் பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் பிற வசதிகளுக்கான செலவுகளையும் கேரள அரசாங்கமே ஏற்கும்.” என்றார்.
தொடர்ந்து, அர்ஜெண்டினா அணி கேரள சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததாக செய்தி நிறுவனத்தில் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும், கேரள விளையாட்டு அமைச்சர் வி. அப்துர் ரஹ்மான் இதுகுறித்து கூறுகையில், ”இந்த நிகழ்வின் ஸ்பான்சர் தேவையான போட்டிக் கட்டணத்தை இப்போது செலுத்திவிட்டது. இனி அர்ஜெண்டினா அணி வருவதற்கு எந்த தடையும் இல்லை. FIFA சாளரத்தின்படி, அக்டோபர்-நவம்பர் மாதங்கள் இதுபோன்ற சர்வதேச நட்பு போட்டிகளுக்கு ஏற்ற நேரம். எனவே அந்த காலக்கெடுவும் எங்களுக்கு சாத்தியமாகும். நிதி பரிவர்த்தனைகளில் அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஸ்பான்சருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையிலானது. போட்டிக் கட்டணம் தீர்க்கப்பட்டுவிட்டதாக ஸ்பான்சர் எங்களுக்குத் தெரிவித்தனர். உலக சாம்பியன்களைக் கொண்டுவருவதன் மூலம் மாநில விளையாட்டுத் துறையில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் ஒரே நோக்கம் ” என்றார். இது மெஸ்ஸியின் இந்திய பயணத்தை உறுதி செய்தது.
அமைச்சர் விளக்கம்:
தொடர்ந்து, கேரள விளையாட்டு அமைச்சர் வி. அப்துர் ரஹ்மான் கடந்த 2025 ஜூன் 6ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் “மெஸ்ஸி வருவார்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், நிகழ்வை நிஜமாக்கியதற்கான ஸ்பான்சருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நட்புரீதியான போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற முக்கியமான போட்டிகளுக்கு கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம் உலகத் தரம் வாய்ந்தது.