IPL 2025 Resumes: ஐபிஎல் 2025ல் மீண்டும் பரபரப்பு.. பைனலை இங்கே வையுங்க..! போராட்டத்தில் குதித்த ரசிகர்கள்!
IPL 2025 Final Venue: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025, மே 17 முதல் மீண்டும் தொடங்குகிறது. கொல்கத்தா இறுதிப் போட்டி இடம் மாற்றப்பட்டதால், ரசிகர்கள் ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம் முன் போராட்டம் நடத்தினர். புதிய அட்டவணைப்படி, இறுதிப் போட்டி ஜூன் 3 அன்று அகமதாபாத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை (India – Pakistan Tensions) காரணமாக, ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தின் காரணமாக இன்று அதாவது 2025 மே 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. முதல் போட்டியில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கிடையில் பிசிசிஐக்கு ஒரு பெரிய பிரச்சனை எழுந்துள்ளது. ஐபிஎல் மீண்டும் தொடங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த முடிவால் கொல்கத்தாவின் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். இதன் காரணமாக நேற்று அதாவது 2025 மே 16ம் தேதி ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரசிகர்கள் போராட்டம் நடத்த காரணம் என்ன..?
View this post on Instagram
பழைய அட்டவணையின்படி, ஐபிஎல் 2025ன் இறுதிப் போட்டியானது 2025 மே 25ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கிடைத்த தகவலின்படி, இப்போது இறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் நடைபெறாது என்று கூறப்படுகிறது. இதனால் கொல்கத்தா கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்து 2025 மே 16ம் தேதியான நேற்று ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திற்கு வெளியே போராட்டத்தை நடத்தினார்.
போராட்டத்திற்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்த 2025 ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியானது பழைய அட்டவணையின்படி, முன்பு முடிவு செய்யப்பட்ட அதே இடத்தில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து, போராட்டம் நடத்திய ரசிகர்கள் பிசிசிஐ தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
2025 ஐபிஎல் இறுதிப் போட்டி எங்கு எப்போது நடைபெறுகிறது..?
2025 மே 25ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியானது புதிய அட்டவணையின்படி, 2025 ஜூன் 3ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், இந்த இறுதிப்போட்டியானது இடம் மாற்றப்பட்டு கொல்கத்தாவிற்குப் பதிலாக அகமதாபாத்தில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த சீசனின் தகுதிச் சுற்று 2ம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகுதி சுற்று 2 போட்டியானது 2025 ஜூன் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. இருப்பினும், இறுதிப் போட்டி எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னும் எந்த இடமும் முடிவு செய்யப்படவில்லை.