AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tiruchendur: திருச்செந்தூர் செல்ல உகந்த நாள் எது?.. என்ன காரணம் தெரியுமா?

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எந்த நாள் சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கலாம். அதேபோல் அங்கு சென்றால் கடலில் நீராடுதல், நாழி கிணற்றில் நீராடுதல், தூண்டுகை விநாயகர் வழிபாடு போன்ற முக்கிய வழிபாட்டு முறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். முருகன் அருளால் மன அமைதி, நேர்மறையான எண்ணங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

Tiruchendur: திருச்செந்தூர் செல்ல உகந்த நாள் எது?.. என்ன காரணம் தெரியுமா?
திருச்செந்தூர் முருகன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 06 May 2025 11:30 AM IST

பொதுவாக ஆன்மிக தலங்களுக்கு செல்லும் போது நம்மை அறியாமல் ஒரு மன அமைதி, நேர்மறையான எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். அதேபோல் நாம் எப்பேர்ப்பட்ட துன்பங்களை, கஷ்டங்களை அனுபவித்தாலும் அந்த கடவுளின் முகம் பார்க்கும்போது, அவர்களிடம் சரணாகதி அடையும்போது அனைத்தும் நம்மை விட்டு அகன்ற மனோபாவம் உண்டாகும். இது அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும். இப்படியான வழிபாட்டு தலங்களுக்கு நாம் எந்த நாளில் சென்றால் சிறப்பு என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் வரும் 365 நாட்களும் திறந்திருக்கும். அனைத்து நாட்களும் மக்கள் வருகை தருவார்கள். ஆனால் ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு நாள் விசேஷமாக பார்க்கப்படும். அப்படியாக முருகனின் (Lord Murugan) இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு (Tiruchendur) பக்தர்கள் எந்த நாளில் சென்றால் சிறப்பு என்பது பற்றிப் பார்க்கலாம்.

திருச்செந்தூர் முருகன் கோயில்

தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகள் உண்டு என்பது அனைவரும் அறிந்த தகவலாகும். இதில் இரண்டாம் படை வீடாக அறியப்படும் திருச்செந்தூர் மட்டும்தான் கடற்கரை தளத்தில் அமைந்த ஒரே முருகன் கோயிலாகும். திருப்புகழில் இந்த கடலானது முருகனுக்காக சிவபெருமான் உருவாக்கியது என அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார். சமீப காலமாக பலரது பிரச்சனைக்கும் தீர்வாக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வழிபடுமாறு சொல்லப்பட்டு வருகிறது.

இதனால் வழக்கத்தை விட ஒவ்வொரு நாளும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திருச்செந்தூர் சென்றால் திருப்பம் கிடைக்கும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும், எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் செல்லும் முன் செய்ய வேண்டியது

அதாவது வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவையெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதற்காக வணங்க வேண்டிய தெய்வங்களுள் ஒன்று முருகன். திருச்செந்தூர் முருகனை நாம் தரிசனம் செய்ய செல்வதற்கு முன் மனதையும், உடலையும் தயார் படுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள முருகனின் படத்திற்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். திருப்புகழ் தெரிந்தவர்கள் அதனை பாராயணம் செய்யலாம்.

திருச்செந்தூர் சென்ற பின்..

திருச்செந்தூர் சென்றவுடன் முதலில் கடலில் நீராடி விட்டு பின்னர் நாழி கிணற்றில் நீராட வேண்டும். சிலருக்கு நாழி கிணற்றில் நீராடி விட்டு கடலில் நீராட விருப்பம் இருக்கலாம். எது எப்படியோ இரண்டிலும் கண்டிப்பாக நீராடி இருக்க வேண்டும். அதன் பிறகு கடைவீதி பகுதியில் அமைந்திருக்கும் தூண்டுகை விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும். அதன் பின்னர் தான் முருகன் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

மூலவரான சுப்பிரமணியரையும் சண்முகரையும் வழிபட்ட பிறகு சன்னதிக்கு பின்புறம் இருக்கும் பஞ்சலிங்கங்களையும் வழிபட வேண்டும். அது மட்டுமல்லாமல் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் குரு பகவான், பெருமாள், பைரவர் ஆகிய சன்னதிகளையும் சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

திருச்செந்தூர் செல்ல சரியான நாள்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாம் நினைத்த பொழுதெல்லாம் சென்றுவிட முடியாது. நாம் செல்ல நினைக்கலாம், ஆனால் முருகனின் அருள் இருந்தால் தான் நம்மை பார்க்க நினைப்பார் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. இப்படியான நிலையில் திருச்செந்தூருக்கு புதன்கிழமை புறப்பட்டு சென்று அங்கு இரவு தங்கி வியாழக்கிழமையில் முருகப்பெருமானை வழிபடுவது சிறந்தது என சொல்லப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் முருகன் காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்யக்கூடிய சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாக திகழ்கிறார். மேலும் முருக பெருமான் குரு பகவானுக்கு அருள் செய்த தலம் என்பதாலும் வியாழக்கிழமை உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. திருச்செந்தூருக்கு சென்றால் குறைந்தது 8 முதல் 12 மணி நேரம் அங்கேயே இருக்க வேண்டும் என ஆன்றோர்கள் சொல்கிறார்கள். அங்கு நிறைந்திருக்கும் பாசிட்டிவான உணர்வுகளை நாம் உள்வாங்கும்போது நிச்சயம் மனதில் இருந்த துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us