நாவூறும் செட்டிநாடு ஸ்பெஷல்: மணமணக்கும் முட்டை பணியாரக் குழம்பு செய்யும் முறை!
Chettinad Egg Paniyaram Gravy: செட்டிநாடு சமையல் என்றாலே அதன் மசாலா வாசனையும், தனித்துவமான சுவையும் நம் நினைவுக்கு வரும். அந்த வரிசையில், குழம்பில் இடும் இந்த "செட்டிநாடு முட்டை பணியாரக் குழம்பு" அசைவ பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதனை எளிமையாகவும் சுவையாகவும் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே காண்போம்.

பணியாரக் குழம்பு முட்டை ரெசிபி
செட்டிநாடு முட்டை பணியாரக் குழம்பு செய்வதற்கு முதலில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை விழுதாக அரைத்து, வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், பூண்டு, வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதனுடன் மசாலா பொடிகள், புளிக்கரைசல் மற்றும் நீர் சேர்த்து குழம்பை பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் மசாலாக்களைக் கலந்து, பணியாரக் கல்லில் ஊற்றி சிறிய பணியாரங்களாகச் சுட்டு எடுக்க வேண்டும். தயார் செய்த குழம்பில் தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், சுட்ட பணியாரங்களை அதில் மெதுவாகச் சேர்க்க வேண்டும். பணியாரங்கள் குழம்பைச் சாறு போல உறிஞ்சியதும் மல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பணியாரக் குழம்பு தயார்.
தேவையான மசாலா மற்றும் காய்கறிகள் தயாரிப்பு
இந்தக்குழம்பின் அடிப்படையே நாம் அரைத்துச் சேர்க்கும் விழுதில்தான் உள்ளது. முதலில் ஒரு பெரிய தக்காளி மற்றும் 10 சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு விளக்கெண்ணெய் பயன்படுத்துவது செட்டிநாடு சுவையை அப்படியே கொண்டு வரும். மேலும், குழம்பிற்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றைச் சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி விழுதாக அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
ருசியான குழம்புத் தளம் தயார் செய்தல்
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும், வெந்தயம் இட்டுப் பொரிய விட வேண்டும். பின் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தக்காளி – வெங்காய விழுத்தைச் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குவது அவசியம். பின்னர் தேவையான அளவு நீர், புளிக்கரைசல் மற்றும் மசாலா பொடிகளைச் சேர்த்து, உப்பு சரிபார்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். குழம்பு திக்கான பதத்திற்கு வரும்போது இறக்கி வைக்கவும்.
மென்மையான முட்டை பணியாரங்கள் செய்தல்
குழம்பு ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்கும் போதே, பணியாரத்தைச் செய்யத் தொடங்கலாம். ஒரு வாணலியில் வெங்காயத்தை வதக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மல்லித்தழை சேர்த்து வதக்கி ஆறவிட வேண்டும். ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, வதக்கிய வெங்காயக் கலவையை அதனுடன் சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி, இந்த முட்டைக் கலவையை ஊற்றிச் சிவக்க வெந்ததும் திருப்பிப் போட்டுப் பணியாரங்களாகச் சுட்டு எடுக்க வேண்டும்.
இறுதிப் பக்குவம் மற்றும் பரிமாறுதல்
இறுதிக்கட்டமாக, தயார் செய்து வைத்துள்ள குழம்பை மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்த தேங்காய் விழுத்தைச் சேர்க்க வேண்டும். குழம்பு ஒரு கொதி வந்தவுடன், நாம் சுட்டு வைத்துள்ள முட்டை பணியாரங்களை மெதுவாகக் குழம்பில் சேர்க்க வேண்டும். பணியாரங்கள் குழம்பைச் சாறு போல உறிஞ்சும் வரை மிதமான தீயல் ஒரு நிமிடம் வைத்துப் பின் இறக்க வேண்டும். இப்போது சூடான சாதம் அல்லது இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற கமகமக்கும் செட்டிநாடு முட்டை பணியாரக் குழம்பு தயார்!