6 மாதங்கள் 9 மணி நேரம் தூங்கி ரூ.9 லட்சம் பரிசு வென்ற இளம் பெண்.. எப்படி?
Pune Woman Wins 9 Lakh Rupees Prize for Sleeping | பெங்களூருவை சேர்ந்த வேக் ஃபிட் நிறுவனம் தூக்கத்திற்கான போட்டி நடத்திய நிலையில், அதில் பங்கேற்ற புனேவை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் ரூ.9 லட்சம் பரிசு வென்றுள்ளார். இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற பெண்
பெங்களூரு, ஜூலை 06 : புனேவை (Pune) சேர்ந்த இளம் பெண் ஒருவர் 9 மணி நேரம் தூங்கியதற்காக ரூ.9 லட்சம் பரிசு பெற்றுள்ளார். பெங்களூருவை சேர்ந்த வேக் ஃபிட் என்ற ஸ்டார்ட்அப் (WakeFit Startup) நிறுவனம் தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக நடத்திய இந்த போட்டியில் பங்கேற்ற அந்த பெண், இந்த ஆண்டின் ஸ்லீப் சாம்பியன் (Sleep Champion) என்ற பட்டத்தை வென்றுள்ளார். இந்த நிலையில், தூங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டியில், இளம் பெண் ரூ.9 லட்சம் பரிசு வென்றது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தினமும் 9 மணி நேரம் தூங்கி ரூ.9 லட்சம் பரிசு பெற்ற இளம் பெண்
பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான் வேக் ஃபிட். இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக தூக்கத்திற்கான போட்டியை நடத்தி வருகிறது. மனிதர்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தூக்கம் நேரம் பாதியாக குறைந்துள்ளது. இவ்வாறு குறைந்த நேரம் தூங்குவது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகளை உருவாக்கும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் இடையே தூக்கத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், தூங்கும் போட்டியை நடத்தி வருகிறது. அதாவது கடந்த 4 ஆண்டுகளாக Sleep Internship நடத்தி வருகிறது. அந்த வகையில் 2025-லும் இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பம் செய்த நிலையில், 15 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 15 போட்டியாளர்களுக்கும் வேக்ஃபிட் மெத்தைகள் மற்றும் தொடர்பு இல்லாத தூக்க கண்காணிப்பு சாதனங்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில், போட்டியில் பங்கேற்றவர்களின் தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் கண்காணிக்கப்பட்டது. அதற்கு போட்டியில் பங்கேற்ற அனைவரையும் தொடர்ந்து 60 நாட்களுக்கு இரவில் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என அந்த நிறுவனம் கூறியிருந்தது.
15 பேருக்கு தலா ஒரு லட்சம் பணம் வழங்கிய நிறுவனம்
இந்த போட்டியில் சரியாக தூங்கி புனேவை சேர்ந்த பூஜா மாதவ் என்ற இளம் பெண் ரூ.9 லட்சம் பரிசு பெற்றுள்ளார். இதுதவிர இந்த போட்டியில் பங்கேற்ற மற்ற அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. ஐபிஎஸ் ஆவதற்கு தயாராகி வரும் தான் தினமும் 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே தூங்கியதாகவும், இந்த போட்டியில் பங்கேற்றது தனக்கு தூக்கத்தின் மகத்துவத்தை உணர்த்தியதாக கூறியுள்ளார். இப்போது நான் 9 மணி நேரம் தூங்குகிறேன். இதன் காரணமாக முன்பை விட தற்போது தான் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.