மும்பை, மே 8, 2026: மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் தர்பூசணி பழம் சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு விஷத்தன்மையால் அல்லாமல், “விஷம் கலந்ததால்” உயிரிழந்தது தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களிலும், அவர்கள் சாப்பிட்ட தர்பூசணி மாதிரிகளிலும் எலிகளை கொல்ல பயன்படுத்தப்படும் நச்சுப் பொருளின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடற்கூறு ஆய்வில் அவர்களின் உட்புற உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது விஷத்தன்மைக்கு ஏற்படும் அறிகுறியாக கருதப்படுகிறது.
மும்பை நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்:
45 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி 35 வயதான நஸ்ரீன் மற்றும் அவர்களது மகள்கள் 13 வயதான சைனாப், 16 வயதான ஆயிஷா ஆகியோர், தங்களது மும்பை இல்லத்தில் உறவினர்களுக்கு இரவு விருந்து வழங்கியிருந்தனர். அப்போது மட்டன் புலாவ் பரிமாறப்பட்டது. உறவினர்கள் வெளியேறிய சில மணி நேரங்களுக்கு பிறகு, அதிகாலை 1 மணியளவில் குடும்பத்தினர் தர்பூசணி பழம் சாப்பிட்டுள்ளனர். பின்னர் காலை 5 மணிக்குள் அனைவருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன், சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தனர்.
தர்பூசணி பழத்தில் எலி மருந்து:
தடயவியல் பரிசோதனையில், நான்கு பேரும் சக்திவாய்ந்த எலி விஷத்தால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள், அவர்களது உடல்களில் “ஜிங்க் பாஸ்பைட்” என்ற நச்சு வேதிப்பொருளின் சுவடுகளை கண்டுபிடித்துள்ளனர். இது பொதுவாக எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளாகும்.
மேலும், குடும்பத்தினர் சாப்பிட்ட தர்பூசணி மாதிரிகளிலும் ஜிங்க் பாஸ்பைட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் தவறுதலாக பழத்தில் கலந்ததா அல்லது திட்டமிட்டு ஊசி மூலம் செலுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: வெளிநாட்டு துப்பாக்கி.. பக்கா ஸ்கெட்ச்.. பாஜக தலைவரின் உதவியாளர் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன?
கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட தடயவியல் பரிசோதனையில், உயிரிழந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் உள்ளிட்ட சில உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்தது தெரியவந்தது. இது விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
திட்டமிட்ட சதியா அல்லது தற்கொலையா?
மேலும், அப்துல்லா டோகாடியாவின் உடலில் “மார்பின்” என்ற சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்தின் சுவடுகளும் கண்டறியப்பட்டன. பொதுவாக மருத்துவ கண்காணிப்பில் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த மருந்து, சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டதா, தவறுதலாக உடலில் சென்றதா அல்லது இதற்கு பின்னால் வேறு சந்தேகத்திற்கிடமான காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முதலில் இயற்கையற்ற மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். குடும்பத்தினர் வழங்கிய மட்டன் புலாவை சாப்பிட்டிருந்த உறவினர்களிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.