ஹூக்ளி நதிக்கரையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பயணம்.. வைரலாகும் புகைப்படங்கள்!
PM Narendra Modi: மேற்கு வங்கத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து அடுத்தகட்ட பிரச்சாரங்களை பிரதமர் தொடங்கியுள்ளார். கிருஷ்ணாநகர் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "நான் 'ஜால்முரி' (மசாலா பொரி) சாப்பிட்டது சிலருக்குத் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கேள்விப்பட்டேன் என்றார்.

படகு சவாரி செய்தி பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதிக்கரையில் நேரத்தைச் செலவிட்டார். அப்போது மேற்கு வங்க மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகத் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். தனது பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர், ஹூக்ளி நதியை மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தோடு இணைந்த ஒன்று என்று வர்ணித்தார்.
மேலும் அந்த பதிவில், “ஒவ்வொரு வங்காளியின் மனதிலும் கங்கை நதிக்கு ஒரு தனி இடம் உண்டு. கங்கை நதியானது வங்காளத்தின் ஆன்மாவில் பாய்கிறது என்றே சொல்லலாம்,” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்னை கங்கைக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் விதமாக இந்த நேரத்தைச் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுடன் கலந்துரையாடல்:
For every Bengali, the Ganga occupies a very special place. One can say that the Ganga flows through the soul of Bengal. Her divine waters carry the timeless spirit of an entire civilisation.
This morning in Kolkata, I spent some time on the banks of the Hooghly river, an… pic.twitter.com/I3Y0gsFl3E
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
ஹூக்ளி நதிக்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் படகோட்டிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது படகோட்டிகளின் கடின உழைப்பைப் பாராட்டிய அவர், இந்தச் சந்திப்பு மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு கொண்டுள்ள கடமையை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றார்.
மேலும், புகழ்பெற்ற வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தின் காட்சிகளை மிக நெருக்கமாகப் பார்த்ததாகவும், ஹூக்ளி நதிக்கரையில் கழிந்த காலைப் பொழுது மிகவும் சிறப்பானது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் களம் மற்றும் ‘ஜால்முரி’ அரசியல்:
Last evening, was on the Howrah Bridge during the long roadshow from Howrah to Kolkata. And this morning, saw it from the Hooghly river! pic.twitter.com/ri2MA1WbR8
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
மேற்கு வங்கத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து அடுத்தகட்ட பிரச்சாரங்களை பிரதமர் தொடங்கியுள்ளார். கிருஷ்ணாநகர் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “நான் ‘ஜால்முரி’ (மசாலா பொரி) சாப்பிட்டது சிலருக்குத் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். ஜால்முரியில் உள்ள மிளகாயின் காரத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இப்போது உணர்கிறார்கள் போல,” என்று நகைச்சுவையாகத் தாக்கினார். இதற்குப் பதிலளித்த மம்தா பானர்ஜி, “ஜால்முரியின் காரத்தை எதிர்கொள்வது எங்களுக்குப் பழகிப்போன ஒன்று,” என்று குறிப்பிட்டார்.
91.91% வாக்குப்பதிவு: புதிய சாதனை
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 91.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. தட்சிண தினாஜ்பூர் மாவட்டத்தில் 94.85% வாக்குகள் பதிவாகி முதலிடம் பிடித்தது. கூச் பெஹார் (94.54%), பிர்பூம் (93.70%), ஜல்பைகுரி (93.23%) மற்றும் முர்ஷிதாபாத் (92.93%) எனப் பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.