குரோஷியாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர்.. பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
PM Modi Visit To Croatia: குரோஷியாவிற்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமராக, மோடி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட (IMEC) முயற்சியின் பின்னணியில் குரோஷியாவின் முக்கியத்துவம் அதிகமாக வெளிப்படுகிறது. அதேபோல், மேற்கு ஐரோப்பிய நுழைவாயில்களுக்கு மாற்று வழியை இந்தியாவிற்கு இது வழங்கும்.

குரோஷியாவிற்கு சென்ற பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) புதன்கிழமை (ஜூன் 18, 2025) குரோஷியாவுக்கான தனது பயணத்தை முடித்தார், அங்கு அவர் பால்கன் (Balkan) நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குரோஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டத்தில் இங்கு வந்தார். மேலும், சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கான மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, புது தில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரோஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடியை, பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் வரவேற்றார்.
இந்தியா – குரோஷியா இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள்:
Held productive talks with my friend, Prime Minister Andrej Plenković in Zagreb. Our talks covered many sectors, aimed at making the India-Croatia bond even stronger. We will be working closely in the fields of defence and security, pharmaceuticals, agriculture, IT, renewable… pic.twitter.com/fOZLigslkO
— Narendra Modi (@narendramodi) June 18, 2025
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, பிரதமர் பிளென்கோவிச்சுடன் உயர்குழு மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். மேலும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக ஜனாதிபதி ஜோரன் மிலானோவிச்சை சந்தித்தார்.
இருதரப்பு உறவுகளுக்கு “மூன்று மடங்கு” வேகத்தை வழங்க தானும் குரோஷிய பிரதமரும் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒரு திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தையின் போது வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர்.
விவசாயம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நான்கு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்தியவியல் ஆய்வு தொடர்பான மற்றொரு ஒப்பந்தத்தில் ICCR மற்றும் ஜாக்ரெப் பல்கலைக்கழகம் இடையே கையெழுத்தானது.
இந்த பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
Met Mr. Zoran Milanović, the President of Croatia. Had extensive discussions on the full range of India-Croatia friendship, including ways to boost linkages of commerce and culture.@Ured_PRH pic.twitter.com/sR92q3U6I6
— Narendra Modi (@narendramodi) June 18, 2025
அட்ரியாடிக் கடலின் கிழக்கு கடற்கரையில் குரோஷியா அமைந்துள்ளதால், அது ஐரோப்பாவிற்கான ஒரு முக்கியமான கடல்வழி நுழைவாயிலாக நிலைநிறுத்தப்படுகிறது. நாட்டின் முக்கிய துறைமுகங்களான ரிஜேகா, ஸ்பிளிட் மற்றும் ப்ளோஸ் – ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய TEN-T நெட்வொர்க்கின் ஒருங்கிணைந்த அம்சமாகும். அவை டிரான்ஸ்-ஐரோப்பிய போக்குவரத்து உள்கட்டமைப்பை ஆதரிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த துறைமுகங்கள் ஐரோப்பிய ஏற்றுமதிகளுக்கு முக்கிய முனைகளாகும்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட (IMEC) முயற்சியின் பின்னணியில் குரோஷியாவின் முக்கியத்துவம் அதிகமாக வெளிப்படுகிறது. இந்த புதிய வர்த்தகச் சங்கிலியில், குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு விநியோகிக்க, குரோஷியா ஒரு முக்கிய இணைப்பாக செயல்படும். இது பாரம்பரிய மேற்கு ஐரோப்பிய நுழைவாயில்களுக்கு மாற்று வழியை இந்தியாவிற்கு வழங்கும்.