Operation Sindoor : இந்தியா பதிலடி.. விடிய விடிய கண்காணித்த பிரதமர் மோடி.. வெளியான தகவல்!
PM Modi Monitoring Operation Sindoor : பஹல்காம் தாக்குதலுக்குப் பின், இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற வான்வழித் தாக்குதலை பாகிஸ்தானில் நடத்தியது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தளங்கள் உட்பட ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை நேரடியாகக் கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஹல்காமிற்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் தொடர்ந்து நடவடிக்கையை கண்காணித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானின் 9 பயங்கரவாதத் தளங்களை குறிவைத்து, அண்டை நாட்டிற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இதற்கிடையில், பிரதமர் மோடி காலை 11 மணிக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை அழைத்துள்ளார்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் கோட்டையான பஹவல்பூரும் இலக்குப் பகுதியில் அடங்கும். இந்த நடவடிக்கையின் போது பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைமையகம் மற்றும் முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைமையகம் உட்பட ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இந்திய ராணுவத்தின் பதிவு
Justice is Served.
Jai Hind! pic.twitter.com/Aruatj6OfA
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 6, 2025
பிரதமர் மோடி கண்காணிப்பு
அரசாங்க வட்டார தகவலின்படி, இந்த நடவடிக்கைகளை பிரதமர் கண்காணித்துள்ளார். பாதுகாப்புப் படைத் தலைவர், மூத்த உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரால் அவருக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடிக்கும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
எந்த இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது?
பாகிஸ்தானில் 9 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இவற்றில் 4 பாகிஸ்தானிலும், 5 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நிகழ்ந்துள்ளன.
தாக்குதல் நடந்த இடங்கள்
- முசாபராபாத்
- கோட்லி
- குல்பூர்
- பிம்பர்
- சியால்கோட்
- சக் அமரு
- முரிட்கே
- பஹவல்பூர்
ஆபரேஷன் சிந்தூர்
2025, ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசினார். பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். இந்தத் தாக்குதலில் பல பெண்கள் தங்கள் கணவர்களை இழந்ததால், இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது. நேற்றைய தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் “ஜெய் ஹிந்த், நீதி நிலைநாட்டப்பட்டது” என்று பதிவிட்டுள்ளது.
இந்தியா நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் காயமடைந்துள்ளனர். PoK-வில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், வெடிப்புகளுக்குப் பிறகு நகரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் பலர் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் எதிர்வினை
பாகிஸ்தான் செய்தித்தாள் டான் செய்தியின்படி, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஜெனரல் சவுத்ரி கூறியுள்ளார். இருப்பினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.