தியானத்திற்கு சென்ற பிறகு காணாமல் போன பத்மஸ்ரீ விருதாளர் சுப்பண்ணா… ஆற்றில் சடலமாக மீட்பு
Padma Shri Ayyappan's Death: பத்மஸ்ரீ விருது பெற்ற ஐசிஏஆர் முன்னாள் தலைமை இயக்குநர் சுப்பண்ணா ஐயப்பன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்பட்டாலும், ஐசிஏஆர் முன்னாள் உறுப்பினர் வேணுகோபால் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். நீலப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்த சுப்பண்ணா ஐயப்பன், காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

மைசூர் மே 12: பத்மஸ்ரீ விருதாளர் மற்றும் ஐசிஏஆர் முன்னாள் தலைமை இயக்குநர் சுப்பண்ணா ஐயப்பன் (70) (Padma Shri awardee and former Director General of ICAR Subpanna Ayyappan) காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். மைசூருவில் வசித்த அவர் 2025 மே 7ஆம் தேதி முதல் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. காவிரிக்கரையில் அவரது இருசக்கர வாகனம் மீட்கப்பட்ட நிலையில் விபரீத முடிவை எடுத்தாரா என சந்தேகிக்கப்படுகிறது. தியானத்துக்காக சாய்பாபா ஆசிரமத்துக்கு சென்றதாக தெரிகிறது. நீலப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த இவர், பயிர் சாராத விஞ்ஞானியாக ஐசிஏஆரின் தலைமை பொறுப்பேற்ற முதல் நபர் ஆவார். அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை (CBI Investigation Demanded) என முன்னாள் உறுப்பினர் வேணுகோபால் (Former member Venugopal) பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பத்மஸ்ரீ விருதாளர் சுப்பண்ணா ஐயப்பன் மர்ம மரணம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும், பத்மஸ்ரீ விருதைப் பெற்றவருமான சுப்பண்ணா ஐயப்பன் (வயது 70) அவரது சடலம் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்தில் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் தெரிவித்த தகவலின் பேரில், பொதுமக்கள் ஒரு சடலம் ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். DNA மற்றும் உடை அடையாளங்கள் மூலம் அது சுப்பண்ணா ஐயப்பனின் உடலாக உறுதி செய்யப்பட்டது.
இருசக்கர வாகனம் ஆற்றங்கரையில் மீட்பு
காவிரி ஆற்றங்கரையில் அவரது இருசக்கர வாகனம் கண்டறியப்பட்டது. விபரீத முடிவை எடுத்தாரா என சந்தேகத்திற்கு வழிவகுக்கிறது என போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவரது மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகு மட்டும் உறுதியாகக் கூற முடியும் எனவும் அவர்கள் கூறினார்கள்.
கடந்த வாரம் முதல் காணாமல் போனவர் சுப்பண்ணா ஐயப்பன்
மைசூருவில் விஸ்வேஸ்வரா நகர் தொழிற்பேட்டை பகுதியில் வசித்து வந்த சுப்பண்ணா ஐயப்பன், 2025 மே 7 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் வித்யாரண்யபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஸ்ரீரங்கபட்டினம் அருகே உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் தியானம் செய்வது அவருக்கான வழக்கமாக இருந்தது.
நீலப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர்
சுப்பண்ணா ஐயப்பன், இந்தியாவில் நடைபெற்ற ‘நீலப் புரட்சி’யில் முக்கிய பங்காற்றியவர். வேளாண்மை மற்றும் மீன்வள விஞ்ஞானியாக தனது பணி வாழ்க்கையை அர்ப்பணித்த இவர், பயிர் சாராத விஞ்ஞானியாக ஐசிஏஆரின் தலைமை பொறுப்பை வகித்த முதல் நபராகும்.
சிபிஐ விசாரணை தேவை: முன்னாள் உறுப்பினர் வலியுறுத்தல்
இந்த மரணம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை தேவை என ஐசிஏஆர் முன்னாள் உறுப்பினரும் வேளாண் துறையில் செயல்படுபவருமான வேணுகோபால் படரவாடா பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில், “சுப்பண்ணா ஐயப்பனின் மரணம் மர்மமானது. இது சிபிஐ விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். ஐசிஏஆர் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளில் நடைபெறும் நியமன ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை இது வெளிக்கொணர்கிறது,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 2025 மே 5 ஆம் தேதி எந்த விசாரணையும் இல்லாமல் தன்னை ஐசிஏஆர் நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கியது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மரபணு திருத்தம் செய்யப்பட்ட நெல் ரகங்கள் – எதிர்ப்பு
மத்திய அரசு சமீபத்தில் மரபணு திருத்தம் செய்யப்பட்ட ‘டிஆர் ஆர் தனி 100 (கமலா)’ மற்றும் ‘பூசா டிஎஸ்டி ரைஸ் 1’ என்ற நெல் ரகங்களை அறிமுகப்படுத்தியது. இது ஐசிஏஆரால் உருவாக்கப்பட்டதாகும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஐசிஏஆர் நியமன முறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை வேணுகோபால் பரடவாடா எழுப்பினார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்த ஐசிஏஆர், அவரை நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கியது.